நோர்வே அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஒஸ்லோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.
"தமிழர்களாகிய நாங்கள் உங்கள் நாட்டின் மீதும் குறிப்பாக உங்கள் மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டு உள்ளோம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் உயிரைக் காத்ததிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதனையும் நாங்கள் மறக்கமாட்டோம்.
எங்கள் மனம் எல்லாம் நிறைந்து உள்ள நன்றி உணர்ச்சியை நேரில் சொல்ல எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
பின்னர் இலங்கை நிலைவரம் குறித்து அரை மணி நேரம் இருவரும் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது, சமாதான பேச்சுவார்த்தைக்கு நோர்வேயின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான ஜோன் ஹன்சன் பௌரும் உடன் இருந்தார்.
வாழும் கலை மன்றத்தின் நிறுவுனரான ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்திருந்த `தெற்காசியாவில் மோதல்களும் அமைதியும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக வைகோ நோர்வே சென்றுள்ளார்.