கான்பூரில் நடைபெற்ற கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியைப்பெற்றது இந்தியா.
இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட தொடர் 1-1 என சமனிலையில் முடிவடைந்தது.
ஆமதாபாத்தில் தென்னாபிரிக்காவிடம் பெற்ற அதிர்ச்சித் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கான்பூர் வெற்றி இந்தியாவுக்கு அமைந்துள்ளது. கான்பூரிலும் 3 நாட்களில் போட்டி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 ஆம் நாள் ஆட்டம் பரபரப்பாக அமைந்திருந்தது. 9 விக்கெட்டுக்கு 288 ஓட்டங்கள் என்ற நிலையுடன் ஞாயிற்றுக்கிழமை முதல் இனிங்ஸை தொடர்ந்த இந்தியா 325 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, தென்னாபிரிக்காவை விட 60 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
பந்துவீச்சாளர்களான ஷ்ரீசாந்த் -சர்மா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 46 ஓட்டங்களை எடுத்தது. இவர்களது ஆட்டமே இந்தியா சற்று முன்னிலை பெற உதவியாக இருந்தது.
அடுத்து, நம்பிக்கையுடன் இரண்டாவது இனிங்ஸைத் தொடங்கிய தொன்னாபிரிக்கா, குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஹர்பஜன் சிங், சேவாக் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க எதிரணி வீரர்கள் திணறினர். வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
உணவு இடைவேளைக்கு முன்னதாக 2 விக்கெட்டுகளை (மெக்கென்சி, அம்லா) இழந்து தென்னாபிரிக்கா 27 ஓட்டங்களை எடுத்திருந்தது. தேநீர் இடைவேளையின்போது மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆட்டம் தென்னாபிரிக்க அணிக்கு பெரும் சோதனையாக அமைந்தது.
டிவில்லியர்ஸ் (7), பௌச்சர் (5), மோர்கெல் (0), ஹரிஸ் (0) ஆகியோர் அடுத்தடுத்து விரைவிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் கப்டன் ஸ்மித் செய்வதறியாது திகைத்தார்.
5 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களை எடுத்திருந்த அணி 121 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஹர்பஜன் சிங் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரைப்போல சேவாக்கும் பந்துவீச்சில் ஜொலித்தார். 8.5 ஓவர்கள் வீசி, 12 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணிக்கு உறுதுணையளித்தார். டெஸ்ட் போட்டியில் இதுவே அவருக்கு சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது.
62 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலகுவான இலக்குடன் ஆடிய இந்தியா, சேவாக் (22), ஜாபரை (10) இழந்து 13.1 ஓவர்களில் வெற்றிபெற்றது.
போல் ஹரிஸ் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணிக்கு வெற்றிதேடிக்கொடுத்தார் டிராவிட். இவர் 18 ஓட்டங்களையும், கங்குலி 13 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தனர்.
முதல் இனிங்ஸில் 87 ஓட்டங்களைக் குவித்த கங்குலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகனாக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.