ஒரிசாவில் 65 கி.மீ. தொடர் ஓட்டமாக ஓடி சாதனை படைத்த ஆறு வயது சிறுவன் பூடியா சிங்கின் முன்னாள் பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ் ஞாயிற்றுக் கிழமை மாலை அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜூடோ பயிற்சியாளராக இருந்த பிராஞ்சி தாஸ், புவனேஸ்வரத்தில் பி.ஜே.பி. கல்லூரி பகுதியில் அமைந்துள்ள ஜூடோ நிலையத்தில் பயிற்சியை முடித்து விட்டு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த சிலர் பிராஞ்சி தாஸ் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் கழுத்து, இதயம் மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
2006 ஆம் ஆண்டு ஆறு வயது சிறுவன் பூடியா சிங்கின் திறமையைக் கண்டறிந்து அவனுக்குப் பயிற்சியளித்து புரியிலிருந்து புவனேஸ்வரம் வரை 65 கி.மீ. தொலைவை தொடர் ஓட்டமாக ஓடி சாதனை படைக்கச் செய்தார். அப்போது முதல் பிரபலமான அவர் மீது குற்றச்சாட்டுகளும் அவ்வப் போது எழுந்தன. இந்நிலையில் அவரைச் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.