பரிசுத்த பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர் பெனடிக்ட் தனது 81 ஆவது பிறந்தநாளை இன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கொண்டாடவுள்ளார்.
உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான பாப்பரசர் பெனடிக்ட், இன்று அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், பாப்பரசருக்கு இதுவரை யாருக்கும் அளிக்காத வகையில் பிரமாண்ட வரவேற்பை அளிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் திட்டமிட்டுள்ளார்.
ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் வந்திறங்கும் பாப்பரசரை விமான நிலையத்திலேயே வரவேற்கிறார் ஜனாதிபதி புஷ். அமெரிக்கா வரும் வெளிநாட்டு தலைவரை, அமெரிக்க ஜனாதிபதி விமான நிலையம் வரை சென்று வரவேற்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
அன்றைய தினம் பாப்பரசருக்கு 81 ஆவது பிறந்தநாள் என்பதால், வெள்ளை மாளிகையில் பிரம்மாண்ட விருந்துக்கு புஷ் ஏற்பாடு செய்துள்ளார். பாப்பரசர் ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஜேர்மனின் பாரம்பரிய பவேரியன் வகை விருந்து அளிக்கப்பட உள்ளது.
வெள்ளை மாளிகைக்கு புதன்கிழமை வரும் பாப்பரசருக்கு 21 பீரங்கி குண்டுகள் முழங்க இராணுவ வரவேற்பும் அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை வாஷிங்டன் தேவாலயத்தில் அமெரிக்க பேராயர்களுடன் சேர்ந்து பாப்பரசர் சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார். பாப்பரசரின் வருகை குறித்து புஷ் கூறுகையில்; "இலட்சக்கணக்கான மக்களிடம் பேசக்கூடிய நபர் பாப்பரசர். அவர் இங்கு அரசியல் தலைவராக வரவில்லை. நம்பிக்கையின் மனிதனாக வருகிறார்" எனத் தெரிவித்தார்.