* அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
இலங்கை பற்றிய தீர்க்கமான முடிவொன்றையெடுக்க மக்களால், தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கே அதிகாரம் உள்ளது. இத்தகைய தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் வேறொரு நாட்டிடமோ அல்லது எந்தவொரு குழுவிடமோ ஆலோசனை கேட்கத் தயாரில்லையென்று ஏற்றுமதி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை சிறிபோபுர ஏற்றுமதி காரியாலயத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது.
`பயங்கரவாதத்துக்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதேபோல் சமாதானச் செயல் திட்டங்களையும் மேற்கொண்டுவருகிறது.
எமது வாழ்வாதாரத்தையிட்டோ வேறு எந்தச் செயற்பாடுகளையிட்டோ முடிவெடுக்கும் பொறுப்பை நாம் எந்த ஒரு வெளிநாட்டிடமும் ஒப்படைக்கமாட்டோம். எக்காரணம் கொண்டும் எமது இறைமையை தனித்துவத்தை இழக்க நாம் தயாராயில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வளங்களை இறைவன் வழங்கியுள்ளான். மத்திய கிழக்கில் எண்ணெய் வளம். தென் ஆபிரிக்காவில் தங்கம். அமெரிக்காவில் தொழில் நுட்பங்கள் போன்ற வளங்கள் உள்ளன. எமது நாட்டில் இத்தகைய வளங்கள் இல்லாது போனாலும் உயர்ந்த சிறந்த மனிதாபிமானங்கள் இருக்கின்றன.
தொடர்ந்தும் நாங்கள் வெளிநாட்டு உதவிகள் மூலம் வாழத் தயாராக இல்லை வரவு செலவுத் திட்டத்தினால் துண்டு விழும் தொகையை வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்று நிரப்பும் வழக்கத்தையும் நாம் கைவிட்டு விடுவோம். எமது சக்தியையும் சிரமத்தையும் செலவு செய்து முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடனும் உறுதியோடும் இப்போது நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
இலங்கை வறுமை நாடல்ல எமது தனிநபர் ஆதாயம் 1350 அமெரிக்கன் டொலராகும்.
அமைச்சர் சமால்ராஜபக்ஷ
துறைமுகங்கள் விமானசேவைகள் அமைச்சர் சமால் ராஜபக்ஷ பேசும் போது,
`எமது உற்பத்திப் பொருட்களான மரக்கறி, பழவகைகள் 40 வீதமானவை விரயமாகின்றன. அந்த விரயத்தை சரி செய்து கொள்வது மிக முக்கியம்.
சிந்தித்துச் செயல்பட வேண்டும். அம்பாந்தோட்டை விரைவில் அபிவிருத்தி அடையும் பகுதியாக மாறும், துறைமுகம் வீரவில விமான நிலையம் நிறுவப்படுவதோடு இப்பிரதேசம் அபிவிருத்தி அடையும்' என்றும் அவர் தெரிவித்தார்.