இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களில் 30 சதவீதமானவர்கள் கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியாது அல்லல்படுவதாகவும் இதனால் அவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக் காலமாக இலங்கையில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிகண்டு வருவதுடன், விலைவாசி அதிகரிப்புக் காரணமாக, தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இதன் காரணமாகவே தோட்ட மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியாது அல்லல்படுகின்றனர்.
சில தோட்டங்களில் சுமார் 50 வீதமானவர்கள் கற்றல் உபகரணங்களை பெற முடியாது அல்லல்படுகின்றனர்.
மலையகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து மலையகத் தலைமைகளும் பாடசாலைகளுக்கு கட்டிட மற்றும் பௌதிக வளங்களை பெற்றுக் கொடுப்பதுடன், ஆசிரியர்களையும் நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இன்றைய பொருளாதார சிக்கல் நிலை காரணமாக தோட்ட மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, அதற்கு தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு தொழிற்சங்கமும் தமக்குரிய வருமானத்தில் ஒரு பகுதியில் தோட்ட மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள், பென்சில்கள் போன்ற பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அல்லது ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் தமக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அல்லது அமைச்சின் நிதியில் அல்லது அரசாங்க நிதி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இதனை பெற்றுக் கொடுக்க ஆவன செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரசாங்கத்தின் அரிசி மானியம் போன்றில்லாமல் ஆக்கபூர்வமாக இது செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் கட்டாயக் கடமையாக இதனைச் செய்யும் பட்சத்தில் தோட்ட மாணவர்கள் ஓரளவு சுயமாக கல்வி கற்பாளர்களென சுட்டிக் காட்டப்படுகின்றது.
இல்லையேல் தோட்டத் தொழிலாளர்களுடன் அவர்களும் தோட்ட வேலைகளுக்குச் செல்வதனை தவிர வேறு வழியில்லையென தோட்டப் பகுதி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.