* இராணுவத் தளபதி கூறுகிறார்
ஈழப்போர் இதுவரை கண்டிராத உக்கிர யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு காணப்போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்டதன் பின்னர் சர்வதேச நாடுகள் பேச்சு மூலமான தீர்விற்கு வலியுறுத்தின. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் முன்னரை விட உறுதியாகப் போரை முன்னெடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே தற்போது மன்னார், மணலாறு முனைகளில் படிப்படியான முன்னேற்றத்துடன் எதிரிகளை அழித்து வரும் எமது படைகள் யாழ்.முன்னரங்கில், ஈழப்போர் இதுவரை சந்திக்காத படையெடுப்பொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக இராணுவத் தளபதி சூளுரைத்துள்ளார்.
இப்போர் முனை மன்னார், மணலாறு யுத்த முனைகளைப் போல் படிப்படியானதாக இல்லாமல் பாரிய சடுதியான பிரமாண்டமானதாக இருக்கும். யாழ்.முனையில் சில மாதங்களுக்கு முன்னர் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள விருந்தோம். ஆனால் புலிகள் அதை எதிர்பார்த்திருந்ததால் நாம் மன்னார், மணலாறு களமுனைகளைத் திறந்து புலிகளை சண்டைக்கிழுத்து அழித்து வருகின்றோம்.
இப்போது யாழ்.முனையைத் திறப்பதற்கான காலம் வந்துவிட்டது. சரியான நேரம் இன்னும் குறிக்கப்படவில்லை. ஆனால் யாழ். யுத்தமுனையை திறப்பது உறுதி. தனியாக ஒரு முனையில் மட்டுமல்லாமல் கிளாலி முதல் நாகர்கோவில் வரை பரந்து தாக்கப்படும். புலிகளால் மூன்று முனைகளிலும் தாக்குபிடிக்க முடியாமல் திணறுவார்களெனத் திட்டம் போட்டுள்ளார் ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவரது தளபதிகளும்.
2006 அக்டோபர் பிழையான நேரத்தில் ஆனையிறவு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட முயற்சி படுதோல்வியில் முடிந்ததை ஒப்புக்கொண்டார் இராணுவத் தளபதி. 2006 இல் புலிகள் மாவிலாற்றில் சாட்டுக்குத் தாக்கிக் கொண்டு யாழில் திடீரெனத் தாக்குதல் தொடுத்ததால் ஆரம்பத்தில் சிறிது பின்வாங்க வேண்டி வந்தது. பின்னர் மேலதிகமாகப் புலிகளின் பகுதியில் 400 மீற்றர் தூரம் வரை கைப்பற்றியுள்ளதாக யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி கூறியுள்ளார்.
55ஆவது,53ஆவது படையணி குறுகிய காலமாக சிறுசிறு தாக்குதல்கள் மூலம் எதிரியின் பகுதிகளில் தினமும் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இப்படைப் பிரிவுகளும் கவசப் படைப்பிரிவும் யாழ். யுத்த முனையில் திறக்கப்படவுள்ள படை நடவடிக்கையில் பயன்படுத்தப்படுவார்கள்.
யாழ் குடாநாடு எப்போதும் எங்களது முதல் கரிசனைக்குட்பட்ட பிரதேசம். தாக்குதல் டிவிசன்களான 55 வது டிவிசன் 53 ஆவது டிவிசனைத்தவிர 51 ஆவது டிவிசன் வலிகாமத்திலும் 53 ஆவது டிவிசன் வறணியிலுமாக 33 000 படையினரும் பொலிஸ் விமானப் படை, கடல் படையென 8000 படையினருமாக 41,000படையினரது கட்டுப்பாட்டில் யாழ். குடா உள்ளது.
தங்களது கவசப் படையணி துரித வேகத்தில் ஆனையிறவை சென்றடைய முடியுமென்றும் பல திட்டங்கள் இராணுவத்தினரால் போடப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்டத் தளபதி தெரிவுத்துள்ளார்.