* சபாநாயகருக்கு கடிதம்
எம்.ஏ.எம்.நிலாம்
கடந்த வருடம் டிசம்பர் 14 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட விவாத இறுதி வாக்கெடுப்பின்போது அமைச்சரொருவரால் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்டது தொடர்பாக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவான ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகரிடம் கேள்வி எழுப்பி கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
2007 டிசம்பர் 14 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பினைத் தொடர்ந்து ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவினால் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கருகில் மலர் வளையமொன்று வைக்கப்பட்ட விடயம் தங்களுக்கு நினைவிருக்குமென எண்ணுகின்றேன்.
சம்பவம் இடம்பெற்ற அன்றே விடயம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படுமென நீங்கள் சபைக்கு அறியத்தந்தீர்கள். இது ஹான்சார்ட்டிலும் பதிவாகியுள்ளது. சம்பவம் இடம்பெற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் தங்களால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் எந்தவிதமான அறிக்கையும் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
நாம் இது தொடர்பில் தங்களிடம் கேட்டபோது இந்த மலர் வளையம் பாராளுமன்றத்துக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இது எவ்வாறு இடம்பெற்றது. இச் சம்பத்துக்கு பாராளுமன்ற ஊழியர்களில் எவராவது தொடர்பு பட்டுள்ளாரா? பாராளுமன்றப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டதா?
சம்பவம் தொடர்பில் படைக்கல சேவிதரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதா? என்பன போன்ற தகவல்களை நாம் அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.
பாராளுமன்றத்துக்குள் மலர்வளையம் வைக்கப்பட்டபின்னர் இதுவரை அமைச்சர்கள் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை உன்னதமான பாராளுமன்றத்திற்குள் மலர் வளையம் சாத்தப்பட்டதன் சாபம் என மக்கள் கருதுகின்றனர்.
எனவே, சம்பவம் தொடர்பில் தாங்கள் எடுத்த நடவடிக்கை என்னவென்பது குறித்து அடுத்துவரும் பாராளுமன்ற அமர்வின்போது சபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.