* கேள்வி எழுப்புகிறார் மனோகணேசன்
1987 ஆண்டு அரசியல் அமைப்பில் இடம்பெற்ற மாகாணசபை சட்டத்தை தூசி தட்டி மேசையில் வைப்பதற்கே இருபது ஆண்டுகள் ஆகியுள்ளன. 1956 இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தை எழுத்துவடிவில் மாற்றியமைப்பதற்கு 22 வருடங்கள் ஆகின. உண்மை இவ்வாறு இருக்க, சிங்கள அரசாங்கங்கள் மீது தமிழர்களுக்கு எங்ஙனம் நம்பிக்கை ஏற்பட முடியும்? என மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் வாராந்தம் இடம்பெறும் "ரத்துஹிர" (சிவப்புக் கோடு) என்ற அரசியல் விவாத அரங்கில் கலந்துகொண்டபோதே மனோ எம்.பி. மேற்கண்ட கேள்வியை எழுப்பியதாக மேலக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாச, விஜயதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் முடியாது போன மாகாண சபை முறைமையை, நடைமுறையாக்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடிந்திருக்கின்றது என விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியதற்கு பதிலாகவே மனோ எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது;
இந்நாட்டில் புலிகளின் பயங்கரவாதம் நிலவுகின்றது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்று கூறுவதற்கு நான் தயங்கவில்லை. ஆனால், இந்நாட்டில் அரச பயங்கரவாதமும் நிலவுகின்றது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1989 ஆம் வருடத்தில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டபொழுது அன்று அதை இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரச பயங்கரவாதம் என்று குறிப்பிட்டிருந்தார். அதுபோல இன்று தமிழர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படும்பொழுது நான் அதை அரச பயங்கரவாதம் என்று கூறுகின்றேன்.
சிங்களம் மட்டும் சட்டம் 1956 இல் கொண்டுவரப்பட்டது. அதை 1988 இல் 16 ஆவது அரசியல் திருத்தச்சட்டமாக மாற்றி சிங்களத்துடன் தமிழையும் ஆட்சி மொழியாக அறிவித்தீர்கள். இந்த அறிவிப்பு வருவதற்கும் 22 வருடங்கள் ஆகின. ஆனால், இந்த சட்ட மாற்றம் வந்தும் என்ன பயன்? கொழும்பு மாநகரத்தில் தமிழ் பேசும் மக்கள் 50 விழுக்காடுகளுக்கு மேல் வாழ்கின்றார்கள். இங்கேயுள்ள 19 பொலிஸ் நிலையங்களில் எதிலாவது தமிழில் புகார் செய்ய முடியுமா? அரச அலுவலகங்களில் தமிழில் கருமமாற்ற முடியுமா? அதேபோல் 1987 இல் மாகாணசபைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதை அன்றே தமிழ் பேசும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள். அதுவேறு விடயம். இந்த ஒன்றுக்கும் உதவாத சட்டத்தை மீண்டும் தூசி தட்டி எடுத்து மேசையில் வைப்பதற்கே 20 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. அதிலும் பொலிஸ், காணி அதிகாரங்களை களவாடிவிட்டீர்கள். மாகாண சபை சட்டம் பற்றிப் பேசுகிறீர்களே தவிர, இது முழுமையாக சட்டத்தில் உள்ளபடி அமுல்படுத்தப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. உங்கள் அரசியல் வரலாற்றின் இலட்சணம் இதுதான். இந்நிலையில் சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் எங்ஙனம் நம்பமுடியும்?
இந்த நிகழ்ச்சி நடைபெறும் கொள்ளுப்பிட்டிக்கு சமீபமாக ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ளது. இதுதான் அன்றைய பாராளுமன்றம் ஆகும். இந்த கட்டிடத்திற்கு முன்னால் காலிமுக கடற்கரை புல்வெளியில் அமர்ந்து தமிழ்த் தலைவர்கள் செல்வநாயகம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோர் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து 1956 இல் சத்தியாக்கிரகம் செய்தார்கள். அவர்கள் அங்கிருந்தபடி பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி குண்டு வீசவில்லை. ஒரு கல்லைத்தானும் எடுத்துவீசவில்லை. இது முழுக்க முழுக்க சாத்வீக சமாதான அஹிம்சைப் போராட்டமாகும். ஆனால், அவர்களுக்கு என்ன நடந்தது? அன்றைய அரசாங்கம் குண்டர்களை ஏவிவிட்டு அவர்களைத் தாக்கியது. இரத்தம் வடியும் நிலையில் அந்த தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகத்தை முடித்து, பாராளுமன்ற சபைக்குள் நுழைந்தபொழுது அரசாங்கத்தின் அமைச்சர்கள் அவர்களைப் பார்த்து கேலி செய்தார்கள். இதுதான் இந்நாட்டிலே தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்திற்குக் கிடைத்த பரிசு. தமிழ் ஆயுதப் போராளிகள் 1980 இற்குப் பின்பே உருவானார்கள். புலிகளும் ஏனைய போராளிகளும் ஆகாயத்தில் இருந்து பூமிக்கு குதித்து இங்கே இனப்பிரச்சினையை உருவாக்கிவிடவில்லை. தீராத இனப்பிரச்சினையும், அரசாங்கங்களின் அடக்குமுறையும், தமிழ் தேசிய வாதத்தை தூண்டிவிட்டது. தமிழ் தேசிய வாதத்தை தீவிரவாதமாக மாற்றியது. தமிழ் தீவிரவாதத்தை இன்று பிரிவினை வாதமாகவும், பயங்கரவாதமாகவும் மாற்றியுள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது. அதற்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. ஆனால், இலங்கையில் இனப்பிரச்சினையே கிடையாது என்று சொல்பவர்கள் இருக்கின்றார்கள். இங்கே நிகழ்வது பயங்கரவாத பிரச்சினை மாத்திரமே என்று கூறி அனைத்தையும் புலிகளின் பிரச்சினையாக மாத்திரம் பார்க்கின்றவர்கள் இருக்கின்றார்கள். இது தமிழர்களை மேலும் பிரிவினை வாதத்தை நோக்கித் தள்ளுகின்றது. இலங்கையில் வாழ்வது சிங்கள தேசிய இனம் மாத்திரமே. ஏனைய அனைவரும் சிறுபான்மை இனக்குழுக்கள் என ஜாதிக ஹெல உறுமய கூறுகின்றது. இது பைத்தியக்கார சிந்தனையாகும். என்னிடம் கேள்வி கேட்ட ஒருவர் இலங்கையை தமிழர்கள் "இலங்கை" என்ற சொல்லைப் பயன்படுத்தி அழைப்பது தவறு என்று கூறுகின்றார். "லங்கா" என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களை வேதனைப்படுத்துகின்றன. தமிழ்மொழி ஒரு வளமான மொழி. எமது மொழியில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்துவதை எவரும் தடுக்க முடியுமா? எமது அயல்நாட்டை இந்தியா, பாரதம் ஆகிய பல பெயர்களில் அழைக்கிறார்கள். அதேபோல் ஜப்பானை நிப்போன் என்று அழைக்கிறார்கள். இவையெல்லாம் உலக வழக்கு. இலங்கையில் தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் ஏற்றுக்கொள்கிறீர்களா எனக் கேட்கின்றார்கள். இத்தகைய கேள்விகளை கேட்பவர்களுக்கு இலங்கையின் தேசிய கீதம் அதே மெட்டில் தமிழ் மொழியிலும் இருப்பது தெரியவில்லை. தேசிய கொடியில் மாற்றத்தை ஏற்கனவே சிங்கள அரசியல் தலைவரான பிலிப்குணவர்தனவே கோரியிருந்தார். ஒரு மிருகத்தின் உருவம் தேசிய கொடியில் இடம்பெறக்கூடாது என சொல்லியிருந்தார். இந்நிலையில் தமிழர்களின் அபிலாஷைகளை எடுத்து பேசுவதற்கு எனக்கு உரிமை இல்லையா? என்றும் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.