தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சரும் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த விஜேசேகரவின் வீட்டின் முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாத்தறை கோட்டையில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டின் முன்பாக இவர் அங்குமிங்கும் நடமாடியதை அவதானித்த அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினர், இருவரைக்கைது செய்து மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக கைதானவர் மாத்தறை கோட்டகொட பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என்றும் இவரிடம் இருந்து 25 தோட்டாக்களை காற் சட்டை பொக்கற்றில் இருந்து மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது வீட்டைச் சோதனையிட்டபோது ரி 56 ரக 38 தோட்டாக்களும் இராணுவ அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சில காலங்களுக்கு முன்னர் இராணுவத்தில் பணியாற்றிய இவர் தப்பி வந்தவர் என்றும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவர் எதற்காக அமைச்சரின் இல்லத்தின் முன்பு நடமாடினார் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மாத்தறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.