* திட்டவட்டமாக கூறுகிறது நோர்வே
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்குமென நோர்வே தெரிவிக்கிறது.
பிராந்தியத்தில் வல்லரசாக விளங்கும் இந்தியா, நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இலங்கைக்கு உதவுமென இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கான நோர்வேயின் விசேட தூதர் ஹான்சன் பௌர் பி.ரி.ஐ.க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
எதிர்காலத்தில் இலங்கையின் பிரதான பங்காளியாக இந்தியா விளங்குமெனவும் கொழும்பின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக ஒஸ்லோவானது புதுடில்லியுடன் கிரமமான முறையில் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் ஹான்சன் பௌர் கூறியுள்ளார்.
இலங்கையின் முக்கியமான அயல்நாடு இந்தியாவாகும். இலங்கைக்கு உதவுவதில் அந்நாடு எப்போதுமே ஆர்வம் காட்டிவருகிறது. சமாதான நடவடிக்கைகளில் மிகவும் தீர்க்கமான பங்களிப்பை இந்தியா வழங்குமென நான் நினைக்கிறேன். அத்துடன், புதுடில்லி இலங்கையின் முக்கியமான வர்த்தகப் பங்காளியாகவும் உள்ளது.
நீண்டகாலமாக அரசியல் ரீதியிலான பங்காளியாகவும் இந்தியா இருந்து வருகிறது. உண்மையிலேயே இலங்கைக்கு சிறந்த முறையில் உதவுவதற்கான பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த இடத்திலும் அந்நாடு உள்ளது என்றும் ஹான்சன் பௌர் கூறியுள்ளார்.
இலங்கையின் இனநெருக்கடி தொடர்பாகத் திறந்த மனதுடன் நோர்வே தொடர்பாடல்களை மேற்கொண்டு வருவதாக அழுத்தியுரைத்திருக்கும் ஹான்சன் பௌர், அடிக்கடி இந்தியாவுடன் நாம் கலந்தாலோசனை மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில், வழங்கக்கடிய சிறந்த ஆலோசனைகளை இந்தியா கொண்டுள்ளது என்று நாம் நினைக்கிறோம் என்றும் பௌர் தெரிவித்திருக்கிறார்.