* வாஷிங்டனிடம் கொழும்பு ஆட்சேபனை
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான `மை டோட்டர் த ரெ ரோரிஸ்ட்' (My daughter the Terrorist) (எனது மகள் பயங்கரவாதி) திரைப்படத்தை அமெரிக்காவின் திரைப்பட விழாவில் இடம்பெறச் செய்தமையையிட்டு வாஷிங்டனிடம் இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணதிலக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கும் சமஷ்டி விசாரணைப் பிரிவுக்கும் கடிதம் அனுப்பிவைத்திருக்கின்றார்.
நோர்வே படத் தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்டால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது விடுதலைப் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத் திரைப்படம் ஏப்ரல் 4 இல் வட கரோலினாவின் டர்காமில் காண்பிக்கப்பட்டது.
நான்கு தினங்கள் இடம்பெற்ற திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படத்தை காண்பிக்காமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு மற்றும் சமஷ்டி விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் வலியுறுத்தல் விடுத்திருந்தது.
முதலாவது திருத்தத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் பேச்சுச் சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக இத்திரைப்படம் அமைந்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
12 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் தற்கொலை போராளியாக உருவாவதாக மை டோட்டர் த ரெரோரிஸ்ட் படம் அமைந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பினால் பயிற்சியளிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டதொன்று என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோர்வே தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்ரட்டஸ் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த தருணம் இலங்கைக்கு வந்ததுடன் வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெறாமல் வன்னிக்குச் சென்றதாகவும் பொறுப்பு வாய்ந்த எந்தவொரு அரச அமைப்பினதும் அனுமதியின்றி படம் எடுத்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.