பங்களாதேஷுக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முகமது அஷ்ரபுல் தலைமையிலான பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையிலான 5 ஒரு நாள் போட்டி தொடரில் 3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் பகல்- இரவு ஆட்டமாக நடந்தது.
நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சல்மான்பட், விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அக்மல் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் தவித்தனர். இந்த ஜோடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
23.5 ஓவர்களில் 151 ஆக ஓட்ட எண்ணிக்கை உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. 81 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 100 ஓட்டங்கள் எடுத்த கம்ரன் அக்மல், மக்முதுல்லா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சல்மான்பட் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். அவர் 127 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 132 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி தரப்பில் மொர்டாசா, ஷகிப் அல்-ஹசல் தலா 2 விக்கெட்டும் ஹுசைன், பர்கத் ரெசா, மக்முதுல்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 309 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 285 ஓட்டங்களையே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல்-ஹசன் 75 ஓட்டங்களும் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால், அப்தாப் அகமது 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரிடி 2 விக்கெட்டும் சொகைல் தன்விர், இப்திகர் அஞ்சும், சொயிப் மாலிக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். சல்மான்பட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-0 என்று ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்குமிடையேயான 4 ஆவது ஒரு நாள் போட்டி முல்தானில் இன்று புதன்கிழமை நடக்கிறது.