* இலங்கை- பாலஸ்தீன நட்புறவு அமைப்பு வேண்டுகோள்
பாலஸ்தீன காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகளால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தாராளமான உதவிகளை வழங்குமாறு இலங்கை பாலஸ்தீன நட்புறவுக்கான அமைப்பு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
அந்த வேண்டுகோளில் மேலும் விளக்கப்பட்டிருப்பதாவது;பாலஸ்தீன காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மற்றும் பொருளாதாரத் தடை காரணமாக காஸா மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறார்கள். தவிரவும் அன்றாட வாழ்வுக்கு அவசியமான அடிப்படை உணவு, உடை, நீர், மருந்துகள், மின்சாரம், எரிபொருட்கள் போன்றவற்றின் நெருக்கடிகளால் துடிதுடித்து பரிதாபமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் மருந்துகளின்றி, வைத்தியர்களின்றி வெறிச்சோடிக்கிடக்கின்றன. எனவே, காஸா மக்கள் சர்வதேச சமூகத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.
இலங்கை வாழ் மக்களாகிய நாங்கள் மனித நேயம் கொண்டவர்கள் என்ற வகையில் அவர்களை துன்பகரமான வாழ்விலிருந்து மீட்டெடுக்க எம்மால் முடியுமான உதவிகளைச் செய்வது எமது கடப்பாடாகும். காஸா மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களான உணவு, மருந்துப் பொருட்கள், உடுதுணிகள், பணம் மற்றும் ஏனைய உதவிகளை உடனடியாக வழங்குவதன் மூலமும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து அமைதிப் பேரணிகளை வழங்குவதன் மூலமும் எமது ஆதரவை வழங்கலாம்.
அந்த வகையில் இலங்கையிலும் இன, மத, மொழி, கட்சி பேதங்கள் அனைத்தையும் மறந்து பொது அமைப்புகள், பல்வேறுபட்ட நிறுவனங்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நல்லுள்ளம் கொண்ட இலங்கைவாழ் மக்கள் பலரும் இலங்கை பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் கீழ் ஓரணியாக ஒன்றிணைந்து பலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
உங்களால் முடியுமான உதவிகளைச் செய்து காஸா மக்களின் துயர்துடைக்க முன்வாருங்கள். இலங்கை பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் மூலம் உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். இதற்காக நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவும் காஸா மக்களைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை இவ்வமைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றும்.
பொருட்கள் பின்வரும் இரு விதமான முறைகளில் சேகரிக்கப்படும்
பொதுமக்களிடமிருந்து சேகரித்தல்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, கலாசார அபிவிருத்திக்கான முஸ்லிம் நிறுவனம், சுதந்திரப் பாலஸ்தீனத்திற்கான நண்பர்கள் அமைப்பு (கொழும்பு), ஜம்இய்யத்துஷ் ஷபாப் நிறுவனம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு ஆகிய அமைப்புகள் மாத்திரமே பொதுமக்களிடமிருந்து பின்வரும் பொருட்களை சேகரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளன.
புதிய ஆடைகள், உலர் உணவுப் பொருட்கள், பாடசாலை உபகரணப் பொருட்கள் மேற்படி நிறுவனங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் தவிர்ந்த வேறு எவரிடமும் பொதுமக்கள் பொருட்களை கையளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளரிடமிருந்து சேகரித்தல்
தேயிலை: பர்ஸான் ராஸிக், நிலவ்பர் இலங்கை ஜமாதே இஸ்லாமி.
புதிய உடுதுணிகள்: ஹமீட் அப்துல் கரீம் இலங்கை பாலஸ்தீன நட்புறவுக்கான அமைப்பின் அங்கத்தவர்
பாடசாலை உபகரணங்கள்: நன்த களுதந்திரி பொதுச் செயலாளர் இலங்கை பாலஸ்தீன நட்புறவுக்கான அமைப்பு
மருந்துப் பொருட்களும் வைத்திய உபகரணங்களும்: சிரான் மஷுர், கலாசார அபிவிருத்திக்கான முஸ்லிம் நிறுவனம்
உதவிகளை செய்ய முன்வருவோர் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பொறுப்பாளர்களிடம் உதவிப் பொருட்களை ஒப்படைக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் டாக்டர் அன்வர் அல்-அகா காஸாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பிவைப்பதற்கான கப்பல் சேவையை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்துள்ளார்.