யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் சுஜாதா அழகப்பெரும உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களான நாளக மதன்வீர மற்றும் அனுரசாந்த ஆகிய இருவரும் ஏற்கனவே நீதிவானுக்கு அளித்துள்ள இரகசிய வாக்குமூலத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பி இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அவரது ஆலோசனையைப் பெறுமாறும் நீதிவான் குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி) பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணை தொடர்பாக தாம் சட்டமா அதிபருக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர்.
2006 நவம்பர் மாதம் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் நாரஹென்பிட்டியில் வைத்து இனம்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மகேஸ்வரன் கொலை
இதேவேளை,கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரவிந்திர பிரேமரட்ண உத்தரவிட்டார்.
இக்கொலை தொடர்பான தமது விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாக கொழும்பு குற்றப்பிரிவுப் பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர்.
அத்துடன் மகேஸ்வரன் எம்.பி.யின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தவர்களிடம் இருந்து இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.