* அமைச்சர் பேரியல் அஷ்ரப்
கிழக்கு மாகாணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுவித்துக் கொடுத்ததன் பயனாகவே நாம் இன்று கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றோம். இதற்காகவாவது நாம் ஜனாதிபதிக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமென அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
அம்பாறை அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் பேரியல் அஷ்ரப் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாணத்தில் ஏதாவது அபிவிருத்திகள் அடைந்துள்ளதென்றால் அது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினதும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் காலத்திலேயேயாகும். ஆனால், ஐ.தே.கட்சி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டார். அந்தக் காலகட்டத்தில் இப்பகுதி மக்கள் பட்ட துன்பங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். அதேபோன்று தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூட பிரபாகரனுடன் ஓர் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டார். அந்த ஒப்பந்தத்துக்கு என்ன நடந்தது. எமது பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் அலுவலகங்கள் திறப்பதற்கும், வழிவகுத்துக் கொடுக்கப்பட்டது. வாழைச்சேனை, மூதூர் போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் பட்ட துன்பங்களை சற்று சிந்தித்து பாருங்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த எமது விவசாய நிலங்களுக்குக் கூட எமக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டதா?
தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கை மீட்டதன் பயனாகத்தான் நமது விவசாய நிலங்களில் இம்முறை விவசாயம் செய்து அறுவடையும் செய்துள்ளோம்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் எமது மக்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்தே எமது பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திகளை கொண்டுவந்தார். தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஏழு வருடங்களாக இப்பகுதி மக்களுக்கு சாதித்துக் கொடுத்து என்ன?
இரண்டு வருடம் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசின் பங்காளியாக இருந்தார்கள். தலைவர்கள் எம்.எச்.எம். அஷ்ரப் 1993 இல் சில சவால்களுக்கு முகங்கொடுத்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள 7 முஸ்லிம் பிரதேச சபைகளில் ஏதாவது ஒன்று தோல்வி கண்டால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வேன் என தெரிவித்தார். ஒரு பிரதேச சபை தோல்வியுற்றதால் அவர் தனது பாராளுமன்ற பதவியை ராஜிநாமா செய்து காலம் சென்ற எம்.எம். முகையதீனை பாராளுமன்றம் அனுப்பினார்.
அவர் செய்தவை சமூகத்தின் நலத்துக்கு அவர் காட்டியது ஒரு முன்மாதிரி? ஆனால், தற்போது முஸ்லிம் காங்கிரஸ் செய்திருப்பது மக்களை திசைதிருப்புவதற்கும் அனுதாபத்தை பெறுவதற்குமேயாகும். தேர்தல் முடிந்ததும் அவர்களிடம் உள்ள தேசிய பட்டியல் ஊடாகவே மீண்டும் பாராளுமன்றம் வருவதற்கே அவர்கள் திட்டம் தீட்டியுள்ளார்கள்.
இந் நிகழ்வில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் எம்.ஐ.எம். றபீக், சட்டத்தரணி அபுல் கலாம், இக்காம் மொஹமட், கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான வெஸ்டர் றியாஸ், சாய்ந்தமருது எம். சலீம், மருதமுனை எம். உவைஸ் ஆசிரியர், பொத்துவில் முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ. அஸீஸ், அம்பாறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.