* ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
தமிழர்களையும் இந்நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக்கொண்டால் மன்னார், வவுனியா மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்புக் கெடுபிடிகளை உடனடியாகத் தளர்த்தி பாதுகாப்பான பயணங்களுக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.
கடந்த சில நாட்களாக மன்னாரில் வசிக்கும் மக்களும் மன்னாருக்கு மதவாச்சியூடாகவும் வவுனியாவிலிருந்தும் வருகை தரும் ஏனைய பிரதேச மக்களும் புதுவிதமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு ஆளாகியுள்ளனர். மதவாச்சி - மன்னார் பிரதான வீதியில் கட்டையடம்பன் சோதனைச்சாவடியைக் கடந்து மன்னாருக்குள் நுழைவதற்கு ஏனைய பிரதேச மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதேபோல் பல வருடங்களாக மன்னாரில் நிரந்தரமாக வசிக்கும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்களும் மன்னாருக்கு வருவதற்கு குறிப்பிட்ட சோதனைச் சாவடியிலுள்ள படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு மன்னார், வவுனியா மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தளர்த்துமாறு கோரி எழுதியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இதனால் உள்ள நடைமுறைச் சிக்கல்களினால் பரிதவிக்கும் மக்களுக்கு தமது உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கூட வழங்கப்படாமல் இன்னொரு நாட்டிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் போல் படையினரால் தடுத்து, திருப்பி அனுப்பப்படும் பரிதாப நிலை காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டிராத அல்லது வதிவிட முகவரி மன்னார் மாவட்டமாக இல்லாத அடையாள அட்டை வைத்திருப்போர் விசாரணைகளின்றி திருப்பி அனுப்பப்படுகின்றனர். எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இந்த நடைமுறை படையினரால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது அப்பட்டமான ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தை அடக்குகின்ற செயற்பாடாகும்.
பாதுகாப்புக் காரணங்களை கூறி நடமாடும் சுதந்திரத்தை, விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமையை பறிக்கின்ற இச் செயற்பாடானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. படையினரால், மீறப்படும் இத்தகைய செயற்பாடு மனித உரிமை மீறலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இதனால், வெளிமாவட்ட மக்களும் மன்னாரில் தற்காலிகமாக வசிக்கும் பொதுமக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுக்கின்றனர். உதாரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரித்து வைக்கப்படுகின்றனர். உறவினர்களைக் கூட சந்திக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. வெளிமாவட்ட வர்த்தகர்கள் வியாபார நோக்கில் மன்னாருக்கு வரமுடியாது. இதனால், பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படும் சூழ்நிலை உருவாகும். இதைவிட மன்னார், வவுனியாவிலிருந்து மதவாச்சி ஊடாக தென்பகுதிக்குச் செல்லும் தமிழர்கள் மதவாச்சியிலிருந்து ரயில்களில் மட்டுமே செல்ல முடியும் எனவும் பஸ்களில் பயணம் செய்ய முடியாது என்ற புதுவித நடைமுறையும் மதவாச்சியிலுள்ள பொலிஸ் மற்றும் படையினரால் கொண்டுவரப்பட்டுள்ளது. முஸ்லிம், சிங்கள இனங்களிலிருந்து தமிழர்களை பிரித்தெடுத்து தனியான போக்குவரத்து நடைமுறையை அமுல்படுத்துவது தமிழர்களை இனங்கண்டு கைது செய்வதற்கும், கடத்துவதற்கும், இலகுவான செயற்பாடாகும். இதனால், தமிழர்கள் அச்ச உணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள. தென்பகுதிக்கு அவசர, அவசிய தேவைகளின் நிமித்தம் பயணம் செய்வோர் தாம் விஷேடமாக இனங்கண்டு தாக்கப்படலாம் என மறைமுகமாக பயமுறுத்தப்படுகின்றனர்.
மனித உரிமை மீறல்கள் மூலம் இன பாகுபாட்டை தோற்றுவிக்க இடமளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.