* அதிகரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
எம்.ஏ.எம்.நிலாம்
நேற்று நள்ளிரவு முதல் அரிசியின் விலைகள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டதாக வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற அவசர ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை அறிவித்தார்.
நேற்றுமாலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற அரிசி விலை தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமையவே அரிசியின் விலையை உத்தரவாதப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் சம்பா அரிசியின் மொத்த விலை 63 ரூபாவாகவும் சில்லறை விலை 70 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டரிசியின் மொத்தவிலை 57 ரூபாவாகவும் சில்லறை விலை 65 ரூபாவாகவும், சிவப்பு பச்சை அரிசி மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 65 ரூபாவாகவும், வெள்ளைப்பச்சை அரிசி மொத்த விலை 48 ரூபாவாகவும் சில்லறை விலை 55 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவாத விலை இன்று முதல் அமுலுக்கு வருவதாகவும் இவ்விலையைவிட கூடுதல் விலைக்கு அரிசியை விற்போர்மீதும், அரிசியை பதுக்க முயற்சிப்போர் மீதும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கடும் நடவடிக்கை எடுக்குமெனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை நெல்லைக் கொள்வனவு செய்து பதுக்கிவைத்துள்ள நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து அந்த நெல்லை பறிமுதல் செய்து உத்தரவாதவிலைக்கு சந்தைக்குக் கொண்டுவரவும் அரசு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.