தெனியாய- அடதெனியா நீர்வீழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் நேற்று புதன்கிழமை பகல் ஜின் கங்கையில் சடலமாக மிதக்கக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த இளைஞர்களில் ஒருவர் காலி- தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் என்றும் ஏனைய நால்வரும் தெனியாய தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்கள் எனவும் தெனியாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.எம்.பி.பிரியந்த தெரிவித்தார்.
இவர்கள் மதுபோதையில் வந்து நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
திடீரென காணாமல்போன இவர்களை இரவு முழுவதும் அப்பகுதி எங்கும் உறவினர்கள் தேடியுள்ளனர்.
நேற்று பகல் இவர்களின் சடலங்கள் நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் ஜின் கங்கையில் மிதந்து வந்ததைக் கண்டவர்கள் தெனியாய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலங்கள் தெனியாய ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
ரபீக் பாரூ (24 வயது) , எஸ்.சசிகுமார் (24 வயது), எஸ்.பாலசுப்பிரமணியம் (24 வயது) , எஸ்.இராமகிருஷ்ணன் (24 வயது) எஸ்.தம்பிராஜா (24 வயது) ஆகிய இவர்களின் சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டன.
தெனியாய தோட்டப்பகுதியில் இச்சம்பவத்தையடுத்து வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அப்பகுதி சோகமயமாகக் காணப்படுகிறது.
கண்டியில்
இதேவேளை, கண்டி- கட்டுகஸ்தோட்டப் பகுதியில் மகாவலி கங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குளித்துக் கொண்டிருந்தபோது நீரினால் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.