பரிசு கொடுத்தது தப்பா... என கப்டன் தோனியை புலம்ப வைத்துவிட்டனர்.
கான்பூர் ஆடுகள பராமரிப்பாளருக்கு இவர் 10 ஆயிரம் ரூபா பரிசளித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக அதிரடியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கான்பூரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது. மூன்றே நாளில் வென்ற இந்தியா, தொடரை 1-1 என்று சமன் செய்தது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே ஆடுகளம் பற்றிப் பிரச்சினை எழுந்தது. இந்திய அணிக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பதாக தென் ஆபிரிக்க வீரர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர். இதனை இந்திய கிரிக்கெட் சபை மறுத்தது. ஆனாலும், ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பெருமளவில் கைகொடுத்தது.
முதல் நாளில் இருந்தே களத்தில் வெடிப்புகள் காணப்பட்டன. இதனை `சுழல்' வீரர்கள் பயன்படுத்திக் கொண்டனர். உதாரணமாக ஹர்பஜன் 7 விக்கெட் வீழ்த்தி வெற்றி நாயகனாக ஜொலித்தார். இவரைத் தவிர சேவக், யுவராஜ் உள்ளிட்ட பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர்கள் கூட விக்கெட் வேட்டை நடத்தினர்.
இப்படி ஒரு அருமையான ஆடுகளம் அமைத்துக் கொடுத்த பராமரிப்பாளர் ஷிவ் குமாரைப் பாராட்டி கப்டன் தோனி 10 ஆயிரம் ரூபா பரிசளித்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினையில் கப்டன் தோனிக்கு இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்; "ஒவ்வொரு போட்டி முடிந்ததும் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு `ரிப்ஸ்' அளிப்பது சகஜமான விஷயம். தோல்வியடைந்தால் கூட `ரிப்ஸ்' வழங்குவதுண்டு. வீரர்கள் அனைனவரும் சேர்ந்து வசூலித்து ஒரு தொகையைப் பராமரிப்பாளர்களுக்குக் கொடுப்பார்கள். எனவே, தோனி நடத்தை விதிமுறைகள் எதையும் மீறவில்லை" என்றார்.
கான்பூர் டெஸ்ட் போட்டியின் அமைப்பாளர் ஒருவர் கூறுகையில்; "மைதான பராமரிப்பாளர்கள் நான்கு அல்லது 5 பேருக்கு சேர்த்துத்தான் தோனி பரிசு கொடுத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபா வரை கிடைக்கலாம். இது என்ன பெரிய தொகையா? வீணாக பிரச்சினை கிளப்புகிறார்கள்" என்றார்.
சர்ச்சைக்குரிய ஷிவ் குமார் கூறுகையில்; "ஆடுகள பராமரிப்பாளர்களைப் பாராட்டி பரிசளிப்பது சகஜமான விஷயம். நான் யாரிடமிருந்தும் இதுவரை தவறான முறையில் பணம் எதுவும் பெறவில்லை" என்றார்.