புதுடில்லியில் இன்று நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திலிருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விலகியுள்ளார்.
சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் ஜோதி நேற்று புதன்கிழமை ஓமானிலிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது. இஸ்லாமாபாத்தில் ஒலிம்பிக் ஜோதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒலிம்பிக் ஜோதி விமானத்தின் மூலம் இஸ்லாமாபாத் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் ஒலிம்பிக் ஜோதிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனும் அச்சத்தில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திற்கான பாதை மாற்றி அமைக்கப்பட்டது. ஒலிம்பிக் ஜோதி ஓட்ட நிகழ்ச்சியில் ஜனாதிபதி முஷாரப் பங்கேற்றார். ஒலிம்பிக் ஜோதி பாகிஸ்தானுக்கு வருகை தந்தது அந்நாட்டு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
பாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒலிம்பிக் ஜோதி வருகிறது. தலைநகர் டில்லியில் இன்று ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திபெத் பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் ஜோதிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால் டில்லியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டங்களினால் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒலிம்பிக் ஜோதிக்கு உச்ச கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெறும் பாதை பாதுகாப்புக் காரணங்களுக்காக ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திலிருந்து சச்சின் டெண்டுல்கர் விலகியுள்ளார். எனினும், அவர் விலகியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே கால்பந்து வீரர் பூட்டியா, முன்னாள் பொலிஸ் அதிகாரி கிரண்பேடி ஆகியோர் திபெத் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒலிம்பிக் ஓட்டத்தில் பங்கேற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.