இலங்கை- மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சென்லூசியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மேற்கிந்திய அணி 2 ஆவதாக ஆடிய போது மழை குழப்பியதையடுத்தே இந்தப் போட்டி கைவிடப்பட்டது.
3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் போட்டித் தொடரில் முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்று மேற்கிந்திய அணி தொடரைக் கைப்பற்றியதுடன் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுயைாகக் கைப்பற்றிவிடும் நோக்கில் களமிறங்கியது.
தொடரை இழந்தாலும் மேற்கிந்திய அணி தொடரை முழுமையாகக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அணி களமிறங்கியது.
நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி இலங்கையைத் துடுப்பெடுத்தாட அழைத்தது.
ஆரம்ப வீரராக களமிறங்கிய குமார் சங்ககார ஒரு ஓட்டங்களில் ஆட்டமிழக்க கப்டன் மஹேல ஜெயவர்தன 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன் பின் சாமரசில்வாவும் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்களை எடுத்து இக்கட்டான நிலையிலிருந்தது.
எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உடவத்த சிறப்பாக ஆடினார். இவருடன் 4 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கப்புகெதரவும் சிறப்பாக ஆட இவ்விருவரும் அணியில் ஓட்ட எண்ணிக்கையை 128 ஆக உயர்த்திய போது கப்புகெதர 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன் பின் களமிறங்கிய திலகரட்ன டில்ஷானும் சிறப்பாக ஆட அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நேரத்தில் 73 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருந்த உடவத்த ஆட்டமிழந்தார்.
இதன் பின் வீரரட்ன களமிறங்கி சிறப்பாக ஆடிய நேரத்தில் 64 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருந்த டில்ஷான் ஆட்டமிழந்தார். வீரரட்ன 41 ஓட்டங்களைப் பெற இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் கைல், பொவல் மற்றும் பிராவோ தலா 2 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கடும் மழை பெய்யவே ஆட்டம் கைவிடப்பட்டது.
இதன்போது மேற்கிந்தியாவின் சட்டகூன் 46 , மோர்டன்- 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர்.