பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஓட்டம் டில்லியில் இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான ஜோதி உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதற்கிடையே சீனாவிடமிருந்து விடுதலை கோரும் திபெத்தியர்கள் ஜோதி ஓட்டத்துக்குத் தொடர்ந்தும் இடையூறு விளைவித்து வருகின்றனர். லண்டன் பாரீஸ் நகரங்களில் ஜோதி ஓட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சீனா கவலையுற்றது.
இந்தியத் தலைநகர் டில்லிக்கு இன்று வியாழக்கிழமை ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்படுகிறது. திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா இந்தியாவிலிருப்பதால் ஜோதி ஓட்டத்துக்கு இடையூறு ஏற்படலாமென சீன அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஜோதி ஒட்டம் சுமுகமாக நடைபெற ஆவன செய்யுமாறு இந்திய அரசை சீனா கேட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் டில்லியில் இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
உள்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
முடிவில் போதுமான பாதுகாப்பளிக்க அனைத்து தரப்பிலும் உறுதி தெரிவிக்கப்பட்டது. டில்லியில் வாழும் திபெத்திய அகதிகளை முழுமையாகக் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஜோதி ஓட்டம் நடைபெறும் 2 கிலோ மீற்றர் தூரமும் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் பாதுகாப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர துணைநிலை இராணுவம், சி.ஆர்.பி.எப். படைப் பிரிவுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மொத்தத்தில் குடியரசு தின விழாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போன்று அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோதி ஒட்டத்துக்கு உறுதுணையாக சீனாவிலிருந்து வரும் 20 பேர் குழு ஜோதியைச் சுற்றி வட்டமாக அரண் அமைத்தவாறு செல்வர். அதற்கு வெளியே பாதுகாப்பு படையினர் வட்டமாக பாதுகாப்பளித்தவாறு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.