* எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சித்திரா பௌர்ணமி விரதம்
த.மனோகரன்
அச்சுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்நான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக அமைகின்றது. மாதந்தோறும் வரும் இச்சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி விரதத்தை மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.
பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.
விரதமானது பாவ காரியங்களிலிருந்து நீங்கி மேலான புண்ணிய சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வழியமைக்கின்றது. உடலையும் உள்ளத்தையும் சீர்செய்யவும் வழிகோலுகின்றது.
திருவிளையாடல் புராணத்தில் சித்திரை விரதத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இந்நாளில் இந்திரன் சிவனை வணங்கி தீவினைகள் நீங்கப் பெற்றதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்நாளில் சித்திர புத்திரனார் விரதமும் வருகின்றது. ஒவ்வொரு வரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்கள் நமது சிறப்பின் பின் கணிக்கப்பட்டு அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ மறுபிறப்பில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது நம்பிக்கை. இதன்மூலம் நாம் தீயனவற்றைத் தவிர்க்க வழியேற்படுகின்றது. சித்திர புத்திரனாரின் தீர்ப்பின் படியே கர்மவினைகள் தொடரும் என்பதால் அவரை நினைத்து விரதமிருந்து வாழ்வைச் செம்மைப்படுத்தி நேரிய வழியில் செயற்பட மனப்பக்குவம் பெற இவ்விரதம் உதவுகின்றது.
மனதைச் செம்மைப்படுத்தி பகுத்தறிந்து தீயன தவிர்த்து, நல்லன நாடி செயற்பட உறுதி கொள்ளும் இச்சித்திர புத்திரனார் விரதமானது மனித குலம் வாழ வேண்டிய சீரிய வழியைச் செப்பனிடும் ஒரு முக்கிய விரதமாகவும் கொள்ளப்படுகின்றது.
மறைந்துவிட்ட தாயாரை நினைவிலிருத்தி வழிபாடு செய்யவும் வாழ்வைச் செம்மையிட்டுக் கொள்ளவும் சித்திரா பௌர்ணமி விரத நாள் மேன்மை பொருந்தியதாகின்றது.
இத்தினத்திலே ஆலயங்களிலே குறிப்பாக அம்மன் ஆலயங்களிலே சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. தாயார் பசிபோக்கி வாழ்வளிப்பவர் அதை நினைவுகூர்ந்து பசிப்பிணியகல அம்மன் அருள் நாடி இச்சித்திரைக் கஞ்சிவார்ப்பு இடம்பெறுகின்றது.