காத்மண்டு: ேநபாள மன்னர் கயனேந்திரா கௌரவமாக பதவி விலக வேண்டுமென மாவோயிஸ்ட்டுகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் போராளி அமைப்பான மாவோயிஸ்ட்டுகளின் இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியான பாபுராம் பட்டரை மன்னர் பதவி விலகுவது ஜனநாயகக் குடியரசு ஒன்று உருவாவதற்கு வழிவகுக்குமெனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களை மாவோயிஸ்ட்டுகள் கைப்பற்றியுள்ள நிலையிலேயே பட்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம் 215 ஆசனங்களில் 116 ஆசனங்களை மாவோயிஸ்ட்டுகள் வென்றுள்ளனர்.
இது அவதானிகளால் எதிர்வு கூறப்பட்ட ஆசனங்களை விட மிக அதிகமானதாகும். அத்துடன் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை நோக்கி மாவோயிஸ்ட்டுகள் முன்னேறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பட்டரை;
அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதற்கூட்டத் தொடரில் நாங்கள் நேபாளத்தை குடியரசாகப் பிரகடனப்படுத்துவோம். அதன் பின்னர் அரண்மனையை விட்டு மன்னரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அவர் ஒரு சாதாரண குடிமகனைப் போல் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்துடன் இணைந்து ெசயற்பட முடியுமெனத் தாம் கருதுவதாக இராணுவத்தினரும் தொழிலதிபர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் புதிய அபிவிருத்திகள் ஏற்படுவதற்கான நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் தென்படுவதாகத் தெரிவித்துள்ள நிருபர்கள் இரண்டு வருட காலப்பகுதிக்குள் போராளி அமைப்பொன்று அரசாங்கத்தை அமைப்பதற்கான மக்கள் ஆணையைப் பெற்றிருப்பதால் நேபாளத்திற்கு தேவையான புதிய ஆரம்பமொன்றை அவர்களால் வழங்க முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.