* கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர்
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவியின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு மாற்று ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவு தமக்கிருப்பதாக முன்னாள் துணைப் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அன்வர் அரசியலில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதனைக் கொண்டாடுவதற்கு அவரது ஆதரவாளர்கள் 10,000 இற்கும் அதிகமானோர் கோலாலம்பூரில் திரண்டனர். ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அன்வர் மாற்று அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான ஆதரவு தனக்கிருப்பதாகத் தெரிவித்தார்.
படாவியின் தலைமையிலான அரசாங்கத்தை எப்போது கவிழ்ப்பது என்பதை எங்கள் கூட்டணியில் உள்ள 3 எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் திடீரென இல்லாமல் சரளமான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றால் அதற்குத் தான் தயார் என்று கூறி இருக்கிறார்.
இதேவேளை, இந்த்ராப் என்ற இந்திய உரிமை நடவடிக்கை கட்சி வெளியில் இருந்து அன்வர் இப்ராகிமுக்கு ஆதரவு தருவது என்று தீர்மானித்துள்ளது.