நாட்டில் மக்களுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்துவதே எனது திட்டமும் நோக்கமுமாகும் எனத் தெரிவிக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதற்காக பஸ் சேவைகளையும் ரயில் சேவைகளையும் மேம்படுத்தப் போவதாகவும் கூறினார்.
மாத்தறையில் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், சாரதிகள் , நடத்துநர்கள் கலந்துகொண்ட கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் தனியார் பஸ்களுக்குப் பாதை அனுமதிப்பத்திரம் வழங்கித் தமது பொக்கற்றை நிரப்பினார்கள். நான் அந்த விதமாக செயற்படவுமில்லை. செயற்படப்போவதும் இல்லை.
ரயில்வே திணைக்களத்தில் அண்மையில் 1500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் பச்சை நிற , நீல நிறக்காரர்கள் அரசியல் பாகுபாடு இன்றியே நான் பணிபுரிந்து வருகிறேன்.
எதுவித அச்சுறுத்தல்களுக்கும் நான் அஞ்சப் போவதுமில்லை. தனியார் பஸ்களிடம் சிலர் கப்பம் கேட்கின்றனர். இது நிறுத்தப்படும்.
மே மாதம் 1 ஆம் திகதியில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்களை ஒன்றிணைத்து நேர அட்டவணைப்படி சேவையாற்றும் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது . இது முதலில் மாத்தறை மாவட்டத்தில் செயற்படுத்தப்படும். பின்னர் ஏனைய பிரதேசங்களிலும் செயற்படுத்தப்படும்.
நாட்டில் இன்று 60 வீதமான பஸ் போக்குவரவு தனியார் மூலமும் 40 வீதம் இ.போ.ச. வினாலும் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் தீர்த்து மக்கள் எதுவித பிரச்சினையுமின்றி போக்குவரவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
புறக்கோட்டை பஸ் நிலையம் இன்று மிகவும் நெருக்கமான இடமாக காணப்படுகிறது.
இதனைப் புனரமைத்து சிறந்த பஸ் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களில் மக்கள் பயணம் செய்ய அச்சம் தெரிவிக்கின்றனர். இதனை மாற்ற தனியார் பஸ் உரிமையாளர்கள் முன் வர வேண்டும் என்றார்.