*பசறை பிரதேசசபை உறுப்பினர்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ரூபா விலைக் கழிவுடன் 10 கிலோ அரிசிக்கான கூப்பன் வழங்கும் திட்டமானது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் திட்டமென்பது தற்பொழுது தெட்டத் தெளிவாகிவிட்டது என்று செ.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பசறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பசறைப் பிரதேச சபை உறுப்பினரான செல்லையா பத்மநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது; கடந்த ஞாயிற்றுக்கிழமை பசறை டெமெரியா தோட்டத் தொழிலாளர்களுக்கு அரிசிக்கான கூப்பனை வழங்குவதற்கு பிரதியமைச்சர் ஒருவரும் வரவழைக்கப்பட்டு வெகுவிமர்சையாக விழா நடத்தப்பட்டது. கூப்பபனை பெற்றுக் கொள்ளும் வண்ணம் தொழிலாளர்கள் வேலைக்கும் செல்லாது காத்திருந்தனர். இங்கு 10 பேருக்கு மாத்திரமே கூப்பன்கள் வழங்கப்பட்டன. ஏனையோரிடம் தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டது.
எவருமே அவற்றை வைத்திருக்க வில்லை. இது குறித்து ஏற்கனவே அறிவிக்காததால் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
10 ரூபா விலைக்கழிவுடன் வழங்கப்படும் 10 கிலோ அரிசியை கூட்டுறவுச் சங்கத்திலே பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விட கூப்பனை வைத்திருக்கும் தொழிலாளி ஒருவர் ஒரு நாள் வேலைக்கான 260 ரூபா நாட் கூலியை இழந்தே இந்த அரிசியைப் பெற்றுக் கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறு எவரும் கூப்பன் மூலம் அரிசியை பெற்றுக் கொள்ள முடியாது.
100 ரூபா இலாபத்திற்காக 260 ரூபாவை இழக்க வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தனியார் கடைகளை விட கூட்டுறவுச் சங்கக் கடைகளில் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் சமுர்த்தி உணவு முத்திரை மூலம் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பிரதேசசபை கூட்டத்தில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏனைய கடைகளில் அரிசி 50 ரூபாவாக விற்பனை செய்யப்படும் பொழுது கூட்றவுச் சங்கக் கடைகளில் அதைவிட அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டதைக் காணமுடிந்தது. இந்நிலையில் கூட்டுறவுச்சங்கத்தில் அரிசியைப் பெற்றுக் கொள்வதால் 10 ரூபா விலைக்கழிவென்பது வெறும் ஏமாற்று வித்தையென்பதைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.
தொழிலாளர்கள் பலர் இதனை உணர்ந்து இந்த அரிசிக் கூப்பனைப் பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதையும் காணமுடிகிறது. அது மாத்திரமல்ல, ஒரு குடும்பத்தில் 10 உறுப்பினர்கள் இருந்து ஒருவர் வேலை செய்யும் பட்சத்தில் அவருக்கு மாத்திரமே கூப்பன் வழங்கப்படுகிறது. மற்றும் தோட்டத்தில் வேலை செய்து ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும், வேலை இல்லாது இருக்கும் குடும்பங்களுக்கும் இக்கூப்பன் வழங்கப்படவில்லை. ஆகவே தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டமே இது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதாயின் தோட்ட நிர்வாகத்தினூடாக இந்த அரிசியை அரசாங்கம் வழங்கியிருக்க முடியும். அதை விடுத்து தொழிலாளர்கள் ஒரு நாள் வேதனத்தை இழந்து இந்த அரிசியைப் பெற வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கக்கூடாது.
இந்தக் கூப்பனை வழங்குவதற்கு ஒரு வைபவம், அதற்கு ஒரு பிரதியமைச்சர் வரவேண்டுமா? அரசாங்கம் 10 ரூபா விலைக்கழிவுடன் அரிசியை மானிய விலையில் வழங்கப்போவதாக தம்பட்டம் அடிப்பது வெறும் ஏமாற்று வேலையே.
இதற்கு மலையக அரசியல்வாதிகள் துணைபோவது மலையக மக்களை குழித்தோண்டிப் புதைப்பதற்கு சமனாகும் என்றார்.