*பஷீர் சேகுதாவூத் அறிக்கை
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிப்பதன் மூலமே தாங்கள் வெற்றிபெற முடியும் என்ற அரசின் கணக்குக்கு அமைவாக முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் அரசியல் பிரதானிகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுக்க நேர்ந்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சித் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
கிசுகிசுக்கப்பட்டு பிசுபிசுத்துப்போன அரசாங்கத்தின் `முஸ்லிம் கூட்டு முன்னணி' என்ற நாடகத்தின் பின்பு தங்களது வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்த ஹிஸ்புல்லாஹ், திடீர் தௌபீக் போன்ற அதியுயர் பீட உறுப்பினர்களைப் பாவித்து, தனித்துத் தேர்தலில் போட்டியிடுமாறு தலைமைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இவ்விருவரும் அரச முக்கியஸ்தர்களின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம் அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்துதான் போட்டியிட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே அழுத்தம் கொடுத்தவர்களாவர். கிழக்கில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் பெரும்பான்மையினர் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விரும்பிய போதும் அரசுடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டும் என்று கூறியவர்களில் மேற்படி இருவருமே மிக முக்கியமானவர்களாக விளங்கினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசுக்கட்சியுடன் இணைத்து தேர்தலில் குதிக்க வைப்பது சம்பந்தமாகத் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.
இப்பேச்சுவார்த்தையின் போது `அரசினால் மதரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இனரீதியாகவும், காணி விடயங்களிலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நிவர்த்தி செய்யுங்கள்; ஆலோசித்துப் பார்க்கலாம்' என்று மு.கா. தலைமை அரசின் அந்த முக்கிய புள்ளிகளிடம் கூறியிருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இக் கோரிக்கை கிழக்கு மாகாணத்துக்கான அரசின் நிகழ்ச்சி நிரலை அடியோடு மறுதலிக்கும் வகையில் அமைந்திருந்தது. அரசும் இதனை உணர்ந்து கொண்டது. தங்களது பிரதான இலக்கையே சிதைக்கும் இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசு விரும்பவில்லை.
எனவே தனது இரண்டாவது திட்டத்துக்குள் அரசு நுழைந்தது. அது தான் "முஸ்லிம் கூட்டு முன்னணி" நாடகம்.
இரண்டாவது திட்டமும் தோல்வியடைந்தவுடன் அரசு மூன்றாவது திட்டத்திற்குப் பாய்ந்தது. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தனித்துப் போட்டியிட வைப்பது இம்மூன்றாவது திட்டமாகும். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், முஸ்லிம்கள் கிழக்கில் ஆளும் தரப்பினராக வராமல் தடுக்க முடியும் என்பதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கூட்டு இலகுவாக ஆட்சிபீடமேற முடியும் என்பதும் சிறுபிள்ளையும் புரிந்து கொள்ளும் உண்மைகளாகும்.
அரசின் இந்தத் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானமாக எடுக்கும் வகையில் தூண்டுதல்களைச் செய்வதற்கு, மு.கா. கட்சிக்குள் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ்வையும், திருமலையைச் சேர்ந்த திடீர் தௌபீக்கையும் தனக்குத் துணையாக அரசு தேர்ந்தெடுத்தது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து எவரையும் அரசினால் கையாள முடியவில்லை.
இவ்வாறான நெருக்கடி நிறைந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் மூன்றாவது திட்டத்தையும் முறியடிக்கும் வியூகத்தை வகுத்துச் செயற்பட்டது.
அரசாங்கம் முஸ்லிம் அமைச்சர்களுடனும் நமது கட்சிக்குள் இருந்த பிரமுகர்களுடனும் சேர்ந்து முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் காங்கிரஸையும் தோற்கடிக்க வகுத்த வியூகத்தின் அடிப்படையிலான மூன்று கட்ட முயற்சிகளை முழுமையாகவும் 4 ஆம் கட்ட முயற்சியை பகுதி அளவிலும் தோற்கடிக்க மு.கா. வினால் முடிந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசுடன் கூட்டமைக்க நிர்ப்பந்தித்தல் இதன் மூலம் அரசு வெற்றியடைதல். அவர்கள் விரும்பிய பொம்மை முதலமைச்சரை, நியமித்து கிழக்கில் பேரினவாத நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றல்.முஸ்லிம் கூட்டு முன்னணியை உருவாக்குதல். இதன் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற சபை உறுப்பினர்களைத் தேர்தலின் பின்பு இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நட்டாற்றில் விட்டுவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தல் - நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றல்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தனித்துப் போட்டியிடத் தூண்டுதல் இதன் மூலம் இலகுவாக வெற்றிபெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எதிர்க்கட்சியாக்கி, இக்கட்சியால் ஒன்றும் செய்ய முடியாது என்று மக்களை நம்ப வைத்து, மக்களுக்குள் செல்வாக்கிழக்கச் செய்து அழித்து விடுதல்- நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றல்.
மேற்குறிப்பிட்ட மூன்று திட்டங்களும் நிறைவேறாவிட்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களைப் பிரித்தெடுத்து கட்சியின் வாக்கு வங்கியில் வீழ்ச்சியை ஏற்படுத்தல் என்ற பலவீனமான திட்டம். இத்திட்டத்தின் அடிப்படையிலேயே ஹிஸ்புல்லாவும், திடீர் தௌபீக்கும் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.
தற்போது நடைமுறையில் இருக்கும் நான்காவது திட்டத்தை முழுமையாக முறியடிப்பது மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. முடிந்தவரை போராடினோம். போராடிக் கொண்டிருக்கிறோம்.