எமது பிரதேசத்தின் அபிவிருத்தி, கிராமங்களின் முன்னேற்றம் போன்றவைகளை மேம்படுத்துவதன் பொருட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் சின்னமான வெற்றிலைக்கே வாக்களிக்க வேண்டுமென இலங்கை ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாபா சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். காத்தான்குடி டீன் வீதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு மிகவும் அவசியமானதாகும். அதனை தற்போதய அரசாங்கம் நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட துறைகளின் அபிவிருத்திகாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரவும், பகலும் உழைத்து வருகிறார். அதனை மேலும் சிறப்பாகச் செய்யும் வகையிலேயே விரைவில் இம்மாகாணத்திற்கான தேர்தலும் நடைபெறவிருக்கின்றது.
பன்னெடுங்காலமாக அபிவிருத்தி செயற்பாடுகள் எதுவுமின்றி நமது பிரதேசம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தினை மிகவும் முனைப்புடன் நின்று அபிவிருத்தி செய்வதற்கு நமக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதனை சரிவர பயன்படுத்திக் கொண்டு பெருமளவிலான நன்மைகளைப் பெற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே விவேகமிக்க நமது சிந்தனையினை நம்மால் வெளிப்படுத்தியதாக இருக்கும்.
வெற்றிலைச் சின்னத்திற்கு நாம் வாக்களிக்காமல் விடுவோமேயாகில் நாம் பல்வேறு வழிகளிலும் பின் தள்ளப்பட்டு விடுவதுடன் நமது பிரதேசத்திற்குக் கிடைக்க வேண்டிய பலகோடி ரூபாக்களுக்கான அபி விருத்தி செயற்திட்டங்களையும் கோட்டைவிட்டு விடக்கூடிய அபாயகரமான சூழ்நிலையை நாம் வலிந்து ஏற்படுத்தியவர்களாக ஆகிவிடுவோம்.இதிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். எனவேநாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் அரசின் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியையும் உறுதிப்படுத்துவோம் என்றார்.