*மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கும் உதவும்; லக்ஷ்மன் கிரியெல்ல
ரொஷான் நாகலிங்கம்
சர்வதேச சிவில் குடியியல் மற்றும் அரசியல் உரிமை சாசனத்தை அரசு முழுமையாக அமுல்படுத்த முற்படுமாயின் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவை வழங்குமென அக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
சர்வதேச சாசனத்தில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள் தொடர்பான 27 சரத்து களை அரசாங்கம் அமுல்படுத்தாததன் விளைவாகவே இன்று இலங்கையின் ஏற்றுமதிகளை தடை செய்வதற்கான சூழ்நிலை தோன்றியுள்ளதாகவும் குற்றம் சா ட்டிய அவர், அமுல்படுத்தப்பட்டால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமெனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
"கிழக்கில் கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் குறித்த உண்மை நிலையை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அதுபோல், அங்கு செயற்படும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படாமை, மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், விசேட அதிரடிப்படையினர் வாபஸ் பெறப்பட்டமை மற்றும் அரச பொலிஸ் அதிகாரிகளின் மாற்றம் குறித்தும் தெரிவித்திருந்தோம்.
அங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல் குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் அங்கு 200 மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது. இதில் வெள்ளை வானில் வந்து 40 பேர் கடத்தப்பட்டமையும் அடங்குகின்றது.
இவ்வாறான நிலையில் எவ்வாறு அங்கு நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் நீதி, நேர்மையாக இடம்பெறுமென நாம் கேட்கின்றோம். நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கிழக்கில் இடம்பெற்ற, இடம் பெறவுள்ள தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உட்பட உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கும் ஜனநாயக காற்றை சுவாசிப்பதற்கும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென நாம் அரசுக்கு கூறுகின்றபோதும் அரசு எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
ஆட்களை கடத்துவதும் கப்பம் அறவிடுதல் போன்ற மனித தன்மைக்கு விரோதமான நடவடிக்கையில் அங்கு ஆயுதக் குழு செயற்படுகின்றது.விடுதலைப் புலிகளை கிழக்கிலிருந்து விரட்டியதாகக் கூறும் அரசு அவர்களின் பாதுகாப்புக்காகவே ஆயுதங்கள் களையப்படவில்லையென கூறுவது எந்த வகையில் நியாயமானது.
சர்வதேச மனித உரிமை சாசனத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ள நிலையில், மனித உரிமை தொடர்பான 27 சரத்துகளை அரசாங்கம் பின்பற்றாததன் நிமித்தம் இலங்கைக்கு எதிரான ஏற்றுமதி தடை விதிப்பதற்கான சூழ்நிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் அங்கு செயற்படும் ஆயுதக் குழுவுடன் உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றமையானது அக்குழுவினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறலுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கின்றதாவென நாம் கேட்கின்றோம். மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் பெருமளவான மீறல்கள் இடம்பெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
எனவே அரசாங்கம் நாட்டில் இடம்பெறும் மனித உரிமையை பாதுகாக்காவிடின் ஏற்றுமதித்தடையை எதிர்கொள்ள நேரிடும். இது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மனித உரிமையை பாதுகாப்பதாகக் கூறி மனித உரிமை தொடர்பில் ஜனாதிபதி அமைத்த சுயாதீனக் குழு தனது அறிக்கையில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அரசுக்கு அரசியல் துணிச்சல் இல்லையென தெரிவித்துள்ளது. அத்துடன், இது தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையிலான சர்வதேச முன்னணி நிபுணர்கள் குழுவினர் இது குறித்து கொழும்பு வந்து விளக்கமளிக்கவுள்ளனர்.
தற்போது சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமையை அரசாங்கம் அமுல்படுத்த முற்படுகின்றது. இது நல்லதொரு நடவடிக்கையாகும். ஆனால், அரசாங்கம் பகுதியள விலேயே இதனை நடைமுறைப்படுத்த நாம் ஒரு போதும் ஆதரவு வழங்கமாட்டோம்.
முழுமையான அளவில் இதனை அமுல் படுத்த அரசாங்கம் முற்படுமாயின் ஆதரவளித்து பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுக் கொடுப்போம்" எனத் தெரிவித்தார்.