*சுட்டிக் காட்டுகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு
இலங்கையிலிருந்து சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் வெளியேற்றம் நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான `இரங்கற்பா' என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சாடியுள்ளது.
இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒரு வருடம் தாங்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பின்னர் பிரயோசனமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான பொறியில் தாம் சிக்கிக் கொண்டனர் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இந்தியா, பிரான்ஸ், இந்தோனேசியா,அமெரிக்கா, நெதர்லாந்து, பங்களாதேஷ், கனடா, சைப்பிரஸ், பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 உறுப்பினர்களடங்கிய சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவானது பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு உதவியளிக்கும் தனது முயற்சிகளை கைவிட்டுள்ளது.
நீதி, மனித உரிமைகள் என்ற நோக்கங்களின் அடிப்படையில் குழுவினர் எதிர்பார்த்திருந்த நோக்கமானது ஆபத்தான சதிக்கு இட்டுச் செல்லப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர். அதனால், அவர்கள் தமது பணிகளை கைவிட்டமை இயற்கையானதொரு விடயமாகும்.
ஜனாதிபதிக்கு சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் மனித உரிமைகள், நீதி தொடர்பான பெறுமானங்களுக்கு மதிப்பளிக்கவும் விருப்பம் இல்லாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
ஆணைக்குழு அமர்வுகளில் நலன்கள் தொடர்பான முரண்பாடு காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் போதியளவாக இல்லையெனவும் அமர்வுகளில் வெளிப்படைத் தன்மை, காலம் என்பன தொடர்பாக குறைபாடுகள் இருப்பதாகவும் அரச அமைப்புகளிடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் இல்லையெனவும் ஆணைக்குழுவுக்கு நீதி தொடர்பாக சுயாதீனமாக இயங்கும் தன்மை போதாமல் இருப்பதாகவும் சர்வதேச நிபுணர்கள் குழு சுட்டிக் காட்டியுள்ளதுடன் ஆறு விடயங்களை உள்ளடக்கிய சிபார்சுகளையும் ஜனாதிபதிக்கு கையளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இலங்கையின் குற்றவியல் நீதித்துறை முறைமை தொடர்பாக சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர் குழுவின் அறிக்கையானது இறந்த உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை போன்றதாக கொள்ளப்பட வேண்டும் என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தமது பரிந்துரைகளில் ஏதாவதொன்று அமுல்படுத்தப்படுமென நிபுணர்கள் குழு நம்புமாயின் அதனை கூறுவதற்கு வார்த்தைகள் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிமுறைமையில் பரவியிருக்கும் நோய் குறித்தே சிபார்சுகளின் பெறுமானமானது சுட்டிக் காட்டியுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தை நிபுணர்கள் குழு கடுமையாக விமர்சித்திருக்கிறது. எவ்வாறாயினும் நிபுணர்கள் குழுவின் விமர்சனங்கள் அடிப்படை ஆதாரமற்றவையென சட்ட மா அதிபர் கூறியுள்ளார். நம்பிக்கையை ஏற்படுத்தும் எந்தவொரு முறைமையிலும் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றின் மீது இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும் போது திறமை வாய்ந்த பக்கச்சார்பற்ற நபர்களால் விசாரணை செய்யப்பட வேண்டும். அவற்றில் உண்மை இருந்தால் பரிகாரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிபார்சுகளை தெரிவிக்க வேண்டும். எவ்வாறாயினும் இந்த விடயத்தில் நோயாளியே மருத்துவராக உருவாகிய தன்மை காணப்படுகிறது.
இலங்கையின் நீதித்துறை தொடர்பாக சர்வதேச நிபுணர்கள் குழுவினர் தமது அனுமானங்களை முன்வைத்துள்ளனர்.
இலங்கை எத்தகைய இடத்தில் இருக்கின்றது என்பதை உலகம் புரிந்து கொள்வதற்குரிய உதவிகளை வழங்குவது அவர்களின் கடப்பாடாகும். நீதித்துறை முறைமையை பாதித்திருக்கும் நோய்கள் தொடர்பாக ஆழமாக புரிந்து கொள்ளாவிடின் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தீவிரமான நடவடிக்கைகளை விருத்தி செய்வதென்பது சாத்தியமற்றதொன்று என்றும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.