எம்.ஏ.எம்.நிலாம்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவானது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டலுக்கமைய செயற்பட வில்லையென அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை விசனம் தெரிவித்திருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மனித உரிமைமீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட சர்வதேச நிபுணர்கள் குழுவினர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கமையவே செயற்பட்டிருக்க வேண்டுமென பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று வியாழக் கிழமை காலை கூறினார்.
செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் வெளியிட்ட உணர்சிவசப்பட்ட கருத்துகளை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல கூறியதாவது:
சர்வதேச சுயாதீன முன்னணி புத்திஜீவிகள் குழு ஜனாதிபதியின் அழைப்பின் மீதே இங்கு வந்தனர். விசாரணைகளின் போது அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி ஆரம்பத்திலேயே அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டிருந்தது. சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் அவற்றை ஜனாதிபதியுடன் அல்லது சட்டமா அதிபருடனேயே பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டு அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கு அரசுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.
அந்தக்குழு செயற்படுவதற்குரிய அதிகார வரம்பிற்கு வெளியே வந்து கருத்துகளை வெளியிட முனைவது நேர்மையானதாகக் கருதமுடியாது. எமது நாட்டுக்கென நீதிச் சட்டம் ஒன்று உள்ளது. அதனைப்புறக்கணித்து எம்மால் எதனையும் செய்ய முடியாது. அதனை வழிநடத்துவதற்காகவே சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலை நிராகரிக்க முடியாது.
வெளியுலகுக்கு அரசாங்கத்தை பற்றி தவறாக பார்வையைக்காட்டுவதற்கானதொரு மனம் வருந்தக் கூடிய அறிக்கையாகவே குழுவின் அறிக்கையை நாம் கருதுகின்றோம். இந்த அறிக்கையை விடுவதற்கு முன்னர் குழு ஜனாதிபதியிடமோ, சட்டமா அதிபரிடமோ கலந்துரையாடியிருக்கலாம் அதைச் செய்யாது அரசு மீது குற்றச்சாட்டு சுமத்த முற்படுவது எந்தவகையில் நியாயமானது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல கேள்வி எழுப்பினார்.