* பிரிட்டன் பிரதமர்
ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மேலும் இறுக்கமாக்கவேண்டுமென பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிறவுண் தெரிவித்துள்ளார்.
ஈரானின் சர்ச்சைக்குரிய அணு நிகழ்ச்சித் திட்டம் மீது ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே தடைகளை விதித்திருந்ததுடன் சர்வதேசம் அத்திட்டத்தை பார்வையிட வேண்டுமெனவும் ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிறவுண் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடர்பான தடைகளை நீடிப்பது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் ஆராயப்படவுள்ளது.
அதன் மூலம் ஈரானின் இவ் அணுநிகழ்ச்சித் திட்டம் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அல்லது ஆக்கபூர்வமான முடிவுகளை தீர்மானிக்கவோ வழிவகுக்குமெனத் தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை சந்தித்துப் பேசிய பின்னரே கோர்டன் பிறவுண் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி புஷ் கருத்துத் தெரிவிக்கையில்; ஈரானின் இவ் யுரோனியம் செறிவூட்டல் திட்டத்துடன் இராணுவதற்திற்கோ அல்லது வேறு போராட்ட குழுக்களுக்கோ தொடர்பில்லையெனக் கூற முடியாது.
ஈரான் அணு ஆயுத வல்லமையை பெறுவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவோமென்பதில் நாம் தெளிவாகவுள்ளோம்.
பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிறவுணும் அதையே விரும்புகிறார். அத்துடன் ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் மீதான தடையே மேலும் இறுக்கமாக்குவதற்குரிய நேரம் தற்பொழுது வந்துள்ளது.
அத்துடன் இப்பிரச்சினையை எம்மால் இராஜதந்திர ரீதியாக தீர்க்க முடியுமென்பதில் நாமும் உறுதியாகவுள்ளமொனத் தெரிவித்தார்.