மலேசியாவிலிருந்து வெளியாகும் மக்கள் ஓசை தமிழ்ப் பத்திரிகைக்கு அந்நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அரசின் இச்செயல் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன.
இவ்விடயம் குறித்து அப்பத்திரிகையின் பொது முகாமையாளர் எஸ்.எம்.பெரியசாமி தெரிவிக்கையில்;
`மக்கள் ஓசை' என்ற தமிழ்ப் பத்திரிகை மலேசியாவிலிருந்து வெளிவருகிறது. 15 ஆண்டுகளாக வாரப் பத்திரிகையாக வெளிவந்த மக்கள் ஓசை, கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தினப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், இந்தப் பத்திரிகைக்கு வழங்கப்பட்ட பதிப்பு உரிமத்தை மலேசிய உள்துறை அமைச்சகம் திடீரென ரத்து செய்தது. பதிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அதிகாரிகள் தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்தனர்.
இத் திடீர் தடையால் புதன்கிழமை இதழ் வெளியாகவில்லை. முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அரசின் இச் செயலை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மனித உரிமை நசுக்கப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது என்று ஜனநாயக செயல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் லிம்கிட் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால்தான் இந்தப் பத்திரிகைக்கு அரசு தடை விதித்துள்ளது எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் பத்திரிகைக்கான பதிப்பு உரிமம் ஒரு மாத காலம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்துவை இழிவாக சித்திரித்ததாகக் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டது.
மலேசியாவில் கடந்த தேர்தலில் ஆளும் பாரிசன் தேசிய கூட்டணி அரசுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மலேசியா வாழ் தமிழர்கள் ஆளும் கூட்டணிக்கு எதிராக வாக்களித்ததே இதற்குக் காரணம் என்று பிரதமர் அப்துல்லா படாவி கருதுவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தமிழ்ப் பத்திரிகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.