* பிரதமர் கிலானி
திறமையான முறையில் அணுவாயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆற்றலை பாகிஸ்தான் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி அவை முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அணுவாயுத பலத்தைக் கொண்ட ஒரேயொரு இஸ்லாமிய நாடாக விளங்கும் பாகிஸ்தான் அல்-ஹைடா மற்றும் தலிபான்களுக்கெதிரான போரில் அமெரிக்காவின் மிக முக்கிய நட்பு நாடாக செயற்படுகின்றது.
முன்னெப்போதும் இல்லாதவாறு அண்மையில் அங்கு இஸ்லாமியப் போராளிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படுகொலைக்குப் பின்னர் வெகுவாக அதிகரித்துள்ள இத் தாக்குதல்களால் பாகிஸ்தான் அணுவாயுதங்களின் பாதுகாப்பு தொடர்பில் பலவாறான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இவ் வாயுதங்கள் போராளிகளின் கரங்களை சென்றடைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட ஊகங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் எவ்வித அடிப்படை ஆதாரங்களுமற்றவை எனக் கூறி நிராகரித்திருந்தனர்.
இந்நிலையில் அணுவாயுத, நிகழ்ச்சித் திட்டத்தின் கட்டுப்பாட்டு மையமான தந்திரோபாய திட்டமிடல் பிரிவிற்கு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் அறிக்கையொன்றை விடுத்துள்ள பிரதமர் கிலானி;
திறமையான முறையில் அணுவாயுத கட்டமைப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலை பாகிஸ்தான் கொண்டிருப்பது தொடர்பில் நான் திருப்தியடைந்துள்ளேன். அணுவாயுத பாதுகாப்புக்கான கட்டமைப்பு பரந்த ஆற்றலையும் முதிர்ச்சியையும் கொண்டுள்ளது. அத்துடன், எமது ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். மேலும், ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கக்கூடிய ஆகக் குறைந்தளவான அபிவிருத்தியில் பாகிஸ்தானில் அணுவாயுதம் முன்னேற்றமடைந்துள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
தேசிய அதிகார கட்டளைபீடத்தின் கீழ் செயற்படும் தந்திரோபாய திட்ட பிரிவும் ஜனாதிபதி முஷாரப்பின் தலைமையின் கீழ் இயங்குகின்ற போதும் கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் முஷாரப்பின் உதவியாளர்கள் தோல்வியடைந்ததை தொடர்ந்து முஷாரப்பின் பலம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதும் பதவியேற்றுள்ள புதிய அரசாங்கத்திற்கு அணுவாயுத பாதுகாப்புக்கான கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டமெதுவுமில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.