* தமிழர் அரசுக்கே வாக்களிப்பர் என்கிறார் பிரதியமைச்சர் நிஜாமுதீன்
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களால் ஐ.தே.கட்சிக்கு போடப்படும் வாக்குகளால் ஐ.தே.கட்சி பலம் பெறுமே தவிர மாகாண சபை ஆட்சியை கைப்பற்ற முடியாதென கல்முனை சமூக முற்போக்கு முன்னணி ஒழுங்கு செய்திருந்த விதவைகளுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய மக்கள் பெருந்தோட்ட முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் தெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் கல்முனைக்கான இணைப்பாளர் ஏ.எம்.ஏ.ஜஸீர் தலைமையில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"1988 ஆம் ஆண்டு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிமுகமாகி மரச் சின்னத்துடன் வந்து யானையை கிழக்கு மாகாணத்தை விட்டு துரத்திய வரலாற்றை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய மரத்தைத் தொலைத்து விட்டு யானைச் சின்னத்துடன் வலம் வருவதனை எந்தவொரு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களாலும் அனுமதிக்க முடியாது.
எங்களுடைய குறிக்கோள் எல்லாம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வர வேண்டும் என்பதுதான். அதற்காக சகல முஸ்லிம்களும் அரசாங்கக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இதைத் தவிர அவர் வருவார், இவர் வருவார் என்பது வெறும் வாக்கு ஜாலமே ஒழிய நடக்காத விடயமாகும்.
ஏனென்றால் தற்போது இருக்கின்ற அமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற மொத்த முஸ்லிம் வாக்குகளும் ஐ.தே.கட்சிக்கு கிடைத்தாலும் அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. தமிழ் வாக்குகளும் சிங்கள வாக்குகளும் அரசாங்கக் கட்சிக்கே கிடைக்கும். எனவே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும் அரசாங்கக் கட்சியை ஆதரித்தால் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதனை எவராலும் தடுக்க முடியாது.
இந்தச் சமயத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் சமூகம் இக்கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே என்ன செய்ய வேண்டும் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து வாக்களிப்பதற்குத் தயாராக வேண்டும்" என்றார்.