* வடமேல் மாகாண முதலமைச்சர் குற்றச்சாட்டு
குருணாகல் பகுதி தனியார் போக்குவரத்து பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உரிய பலனை அளிக்கவில்லையென வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கப்பம் அறவிடும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
குருணாகல் நகரத்திற்குள் பஸ்களிலிருந்து கப்பம் பெறுதல் என்பது சிரமமான காரியம் என்பதால், நகரத்திற்கு வெளியில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கப்பத் தொகைகளைப் பெற்று உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான ஒழுங்குகளை கப்பம் பெறும் கும்பல் மேற்கொண்டுள்ளது.
கப்பப் பணம் அறவிடுவதற்கென குருணாகல் நகரத்திற்கு வெளியில் புதிதாக தம்புள்ள, குருணாகல் பிரதான பாதையிலுள்ள படகமுவ என்ற காட்டுப் பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. படகமுவைப் பிரதான பாதையருகில் சிறிய வர்த்தக நிலையமொன்றை நடாத்தி வரும் பெண்ணொருத்தியிடம் தினமும் பஸ்வண்டியிலிருந்து பெறப்படும் கப்பத் தொகையை வைப்புச் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பெண்ணிடம் சேர்கின்ற பணத்தை பெறுவதற்கு மற்றுமொரு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்புதிய நடைமுறைக்கு எதிராக உரிய முறையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலையும் தோன்றியுள்ளது.
அரசாங்கத் தரப்புக் கட்சியைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் தலையீடு இருப்பதனால் இக்கப்பத் தொகை அறவீடு சம்பந்தமாக எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் அதிகாரிகளால் மேற்கொள்ள முடியாதுள்ளது. இந்நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் இவ்விடயத்தில் எந்நேரமும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. எனவே, இப்பகிரங்க கப்ப அறவீட்டை ஒழிப்பது முடியாத காரியம் என்று அவர் கூறினார்.