* ம.ம.மு.செயலாளர் நாயகம்
மீனுக்கு வாலையும் பாம்பிற்கு தலையையும் காட்ட வேண்டிய நிலையிலேயே பல மலையக தொழிற்சங்கவாதிகள் வாழ்கை நடத்துகின்றார்கள் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ். விஜயகுமாரன் தெரிவித்தார்.
அப்கொட் பிரதேசத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
"இன்று மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களில் அல்லது சமூகசேவைகளில் தங்களை அக்கறையுள்ளவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் ஏதோவொரு வகையில் அரசாங்கத்துடனோ அல்லது ஜனாதிபதியுடனோ உறவுகளைக் கொண்டவர்களாகவே உள்ளனர். ஆனால், எடுத்ததெற்கெல்லாம் மலையக மக்கள் முன்னணியையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் விமர்சிப்பதை மட்டுமே இவ்வாறானவர்கள் தமது சமூக அறிவாக குறைத்து மதிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பாடசாலைக்கு செல்லும் காலங்களிலேயே அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் இன்னும் புலம்பிக்கொண்டிருப்பதோடு ஒரு தெளிவான கொள்கையில்லாமலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ அல்லது மாகாணசபை அங்கத்தவர்களாகவோ இருப்பவர்களை விடவும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருப்பவருக்கு செல்வாக்கும் அதிகாரமும் அதிகம். ஆனால், இவர்களும் இன்று ஒப்பாரியிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பது ஏனென்று புரியவில்லை. வங்கி புத்தகத்தை வைத்துக்கொண்டு எத்தனை காலம் தான் தொழிற்சங்கம் செய்யப்போகின்றார்களோ தெரியாது.
கடந்த காலங்களை விடவும் அரசவளங்களை எமது மக்களுக்கும் கொண்டுசெல்லும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில் மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் அரசாங்க சார்பாக மாறியுள்ளதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எமது மக்களுக்குச் செய்யக்கூடிய ஆகக்கூடிய அபிவிருத்திகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டும்.
எமது சமூகத்திற்குரிய ஏனைய அரசியல் உரிமைகளை மலையக மக்கள் முன்னணி வென்றெடுத்துக்கொடுக்கும்" எனத் தெரிவித்தார்.