அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் இதுவரை அடையாளம் காணப்படாத அதேநேரம், இக்கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் அமைக்கப்பட்ட இந்த விசேட சபையில் சிரேஷ்ட இராணுவ , பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சரின் பாதுகாப்பில் ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டதா என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும் நடைபெற்றுவரும் விசாரணைகளை அடிப்படையாக வைத்து இந்த விசேட விசாரணை சபை ஆராயவுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான என்.கே.இலங்கக்கோன் தெரிவித்தார்.
அமைச்சர் மீதான தாக்குதல் குறித்து தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மிக மிக இரகசியமாக வைக்கப்படும் என்பதுடன் விசாரணையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கும் (ரி.ஐ.டி) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் (சி.ஐ.டி) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விசாரணை நீண்ட நாளெடுக்குமெனவும் அமைச்சரின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமைச்சருக்கு அன்று பாதுகாப்பு வழங்கிய விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரென அனைவரிடமும் மேற்படி விசாரணை சபை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு அன்றையதினம் என்ன நடைபெற்றதென அறிய முற்படுமென்றும் தெரிவித்தார்.