* இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த உதவ விரும்புகிறார்
இலங்கையில் சமாதானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தான் விருப்பம் கொண்டுள்ளதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரும் இந்திய ஆன்மீகக் குருவுமான ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்க தரப்பும் விடுதலைப்புலிகளும் தன்மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியுள்ள ரவிசங்கர் சுவாமி, உலகில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒன்றான இலங்கை நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளுக்கு அழைப்பு கிடைக்க வேண்டிய தேவை இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
ஒருவருடைய வீடு எரிந்து கொண்டிருக்கும் போது உதவிக்கு செல்வதில் அவர் அழைக்க வேண்டுமென எதிர்பார்க்க மாட்டீர்கள். உணர்வுள்ள ஒருவர் உடனடியாக பாய்ந்து அங்கு செல்வார் என்று நோர்வேயிலிருந்து இ-மெயில் மூலம் ஐ.ஏ.என்.எஸ்ஸுக்கு ரவிசங்கர் கூறியுள்ளார்.
உலகம் ஒரே குடும்பம் என்பது எமது நாடி, நரம்புகளில் உள்ளது. அதனால், எம்மால் செயற்படாமல் இருக்க முடியாது. உணர்வுள்ள எவரும் செயற்படுவது சாதாரணமான விடயமென நான் நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பங்களிப்பை வழங்க நீங்கள் விரும்புகின்றீர்களா என்றும் கொழும்பும் புலிகளும் உங்களிடம் நம்பிக்கை கொண்டுள்ளார்களா? என்றும் அவரிடம் கேட்கப்பட்ட போது, நிச்சயமாக என்று அவர் கூறியுள்ளார். சமாதானம் ஏற்படுவதைத் தவிர வேறெந்த உள்நோக்கமும் எம்மிடம் இல்லையென்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர் என்று நான் ஊகிக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
51 வயதுடைய ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கரின் கொள்கைகளை உலகளாவிய ரீதியில் பல இலட்சம் மக்கள் பின்பற்றுகின்றனர். இலங்கைக்கு அவர் மூன்று தடவைகள் விஜயம் செய்துள்ளார். 2006 இல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிளிநொச்சிக்கும் அவர் சென்றுள்ளார்.
ஒஸ்லோவில் அவரின் வாழும் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாடு சிறப்பான முறையில் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
`சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றபோதும் ஒருவரும் வெளியேறிச் செல்லவில்லை. சமாதானம், புரிந்துணர்வு தொடர்பான வலுவான ஈடுபாடு அவர்கள் மத்தியில் காணப்பட்டது' என்று அவர் கூறுகிறார்.
சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்விகண்ட நிலையில் ஆன்மீகக் குருவால் இந்த முயற்சியில் வெற்றியடைய முடியுமா? என்று கேட்கப்பட்டபோது, உலகில் பாரிய வல்லமையுடைய சக்திகள் இருக்கலாம். ஆனால், அவர்களால் மக்களின் இதயங்களையும் மனதையும் ஒன்றுபடுத்த முடியாது. மகாத்மா காந்தி ஆன்மீக உணர்வு கொண்டவராக விளங்கியவராவார். அதனாலேயே விடுதலை இயக்கத்தை அவரால் முன்னெடுக்க முடிந்தது அசாத்தியமானது குறித்து எப்போதுமே நான் கனவு காண்பேன். அது சாத்தியமானதாக உருவாகும் கொசோவோ, அயர்லாந்து, பாகு போன்ற இடங்களில் மோதல்களுக்கு தீர்வு காணமுடியுமாக இருந்தால், இந்தியாவுக்கு மகாத்மா காந்தியால் சுதந்திரத்தை தேடித்தர முடியுமாக இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் இலங்கை மோதலுக்கும் தீர்வுகாண முடியுமென்பதை நிராகரிக்க முடியாது என்று ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கர் தெரிவித்திருக்கிறார்.
சமாதானத்தை கொண்டுவரவும் மக்களின் துன்பங்களைக் குறைக்கவும் உதவுவதற்காக உலகின் எந்த மூலைக்கும் செல்வது பற்றி தான் பொருட்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லும் ரவிசங்கர் இத்தாலி, ஜேர்மனி, பெல்ஜியத்திற்கு சென்ற பின் தற்போது நோர்வேக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை, பின்லாந்து, சிங்கப்பூர், ஹொங்கொங், இந்தோனேசியா, தாய்வான் போன்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்னர் அவர் செல்லவுள்ளார்.
வாழும் கலை அமைப்பின் சமாதானச் செய்தி எந்தளவு தூரத்திற்கு வெற்றியளித்தது என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, இரு பழங்குடியினருக்கிடையிலான மோதலைத் தீர்த்து வைத்ததால் ஐவரிகோஸ்ட் அரசிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. எமது சமாதான முயற்சிகளுக்கு எதியோப்பியாவிலிருந்து பாராட்டு கிடைத்துள்ளது. வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சித் திட்டங்களூடாக காஷ்மீரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சமாதான வழியில் நாட்டம் கொண்டனர். அதேமாதிரியான சம்பவங்கள் பீகாரிலும் சட்டிஸ்காரிலும் இடம்பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.