இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு வியாழக்கிழமை பிரணாப் முகர்ஜியின் இல்லத்தில் நடைபெற்றது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற அமைதி சமாதான மகாநாடு குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதங்கள் குறித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் ஒஸ்லோ மாநாட்டில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் நோர்வே நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் எரிக் சொல்ஹெய்முடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் வைகோ பிரணாப் முகர்ஜியிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது வியாழன் மாலையில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவின் நகலையும் பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தார்.
இலங்கை அரசின் இனக்கொலையால், இராணுவத் தாக்குதலால் தொடர்ந்து தமிழர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனவும் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டதாகவும் அதற்குப் பிரதமர் இது முக்கியமானது என்பதால் வெளிவிவகாரத்துறை அமைச்சரோடு இது குறித்து விவாதிக்கிறேன் என்று கூறியதனை பிரணாப் முகர்ஜியிடம் வைகோ தெரிவித்தார்.
இலங்கைக்கு ஆயுதம் தரவில்லை என்றும் இராணுவத்தின் மூலம் தீர்வு ஏற்படுத்த முடியாது என்றும் இதனை இலங்கையிலேயே இருந்து வருகின்ற அரச தலைவரானாலும் அமைச்சரானாலும் யார் வந்தாலும் இதனை வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் தன்னிடம் கூறியதாக பிரணாப் முகர்ஜியிடம் வைகோ கூறினார்.
அதற்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்சினையில் இலங்கை அரசின் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் கூடாது என்றும், நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம் என்றார்.
போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்று வைகோ கூறினார்.
இது குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வைகோ மீண்டும் சந்திக்க இருப்பதாகக் கூறினார்.