* சர்வமத அமைப்பு கோரிக்கை
நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுக்க எல்லாவித போர் இராணுவ ரீதியான நடவடிக்கைகள், நடமாட்டங்களில் இருந்து மடுத்திருப்பதியையும், ஏனைய வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறு மன்னார் மறைமாவட்ட சர்வமத அருட்பணி மையம் இலங்கை அரசாங்கத்திடமும் தமிழீழ விடுதலைப்புலிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்த மையத்தின் இந்து சமயத் தலைவர், இஸ்லாமிய சமயத்தலைவர், மறைமாவட்ட சர்வமதத் தலைவர் ஆகியோர் ஒப்பமிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களுக்கு மடுத்திருப்பதியானது வணக்கத்திற்கும் பக்திக்குமுரிய ஆன்மீகத் திருத்தலமாக விளங்குகிறது. கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாது ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுக்கும் மருதமடு தனித்துவமானதோர் அருட்தலமாகத் திகழ்ந்து, ஆன்மீக அருளைப் பொழிந்து வருகின்றது. பாதுகாப்பைத் தேடும் மக்களுக்கு மருதமடு ஓர் அடைக்கல பூமியாகவும் இடம்பெயர்ந்தோருக்கு புகலிடமாகவும் இருந்து வந்தது. அனைத்து இராணுவ அல்லது அரசியல் செயற்பாடுகளும் முற்று முழுதாக இங்கு தடைசெய்யப்பட்டு வந்தன. கடந்துபோன ஆண்டுகள் யுத்தகாலமாக இருந்தபோதிலும் மடுத்திருப்பதி தன் நிலையை இழக்கவில்லை. அன்றும் இன்றும் இப்புனித இடத்தில் கோவில் கொண்டிருக்கும் எம் அன்னை இலங்கையின் சகல பகுதிகளிலும் உள்ள எல்லோருக்கும் சகல வரங்களையும் அதிகமாய் வழங்கிக்கொண்டே வருகின்றாள்.
மருதமடுத் தாயின் யூபிலி ஆண்டாகிய 2000 ஆம் ஆண்டிலே, இலங்கைத் தேசம் முழுவதும் அன்னையின் திருச்சொரூபத்தைத் தாங்கிச் சென்றபோது இனம், மொழி, மதம் கடந்து அன்னையை பார்த்து சமாதானத்திற்காகக் கண்ணீர் வடித்த மக்களின் குரல் இன்றும் எம் இதயத்திற்குக் கேட்கிறது. அன்னை தந்த அமைதி வாழ்வும், அவர் தந்த சமாதான நாட்களும் சிதைந்து இன்று எத்தனையோ மக்களின் அழுகுரல்கள் அமைதிக்காக செபித்துக் கொண்டே இருக்கிறது.
மடுத்திருப்பதியைச் சமாதானப் பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தி போர் நடவடிக்கைகள், இராணுவ நடமாட்டங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டு, இத்திருத்தலம் தனது அரிய பணியைத் தொடர ஆவன செய்துதர வேண்டுமென்று இலங்கை ஜனாதிபதியையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் பல தடவைகளில் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆயினும், இன்று மடுத்திருப்பதியில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் இத்திருத்தலமும், அதன் புனிதத்துவமும் மாண்பும் சீர்குலைந்துள்ளதையிட்டு எமது சர்வமத அருட்பணி மையமானது ஆழ்ந்த கவலை கொள்கின்றது. இந்த நெருக்கடியான நேரத்தில் கத்தோலிக்க மக்களுக்கும் மருதமடுத் தாயாரின் பக்தர்களான மற்றைய சமயங்களின் அன்பர்களுக்கும், இலங்கையின் மதத் தலைவர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இத்திருத்தலத்தைப் பாதுகாக்குமாறு மன்னார் மறைமாவட்ட சர்வமத அமைப்பானது உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது.
மருதமடுத் திருப்பதியையும், ஏனைய வழிபாட்டு ஸ்தலங்களையும் இராணுவ அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்று முழுதாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அனைத்து சர்வமத அன்பர்கள் சார்பாக மன்னார் மறை மாவட்ட சர்வமத அமைப்பானது வேண்டுகோள் விடுக்கின்றது.