* மன்மோகன் சிங் வைகோவிடம் தெரிவிப்பு
இலங்கையில் தமிழ் மக்கள் கஷ்டப்பட்டால் அது தொடர்பாக இந்திய அரசாங்கம் அலட்சியப்படுத்திவிட முடியாதென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் புதுடில்லியில் இந்தியப் பிரதமரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தபோதே இதனை அவர் தெரிவித்ததாக வைகோ கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வைகோ இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வைக் காண்பதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்துமாறும் கேட்டிருக்கிறார்.
ஏப்ரல் 10,11 நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற தெற்காசியாவில் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான மாநாட்டின் பெறுபேறு குறித்து தான் பிரதமர் மன்மோகனிடம் விபரமாக எடுத்துக் கூறியதாக வைகோ ்இந்துீ பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் தமிழர்களின் பாதுகாப்பும் உயிரும் ஆபத்தானதாக இருப்பதாகவும் பிரதமரிடம் தான் கூறியுள்ளதாகவும் வைகோ தெரிவிக்கிறார்.
இராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். உணவு, மருந்துகளின்றி, காடுகளுக்குள் தமிழர்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று நான் நிலைமையை பிரதமரிடம் விபரமாக எடுத்துக் கூறியதுடன் இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா விநியோகிக்கக் கூடாதெனக் கோரியதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் தன்னிடம் கூறியதாகவும் இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு இருக்க முடியாது என்று அவர் தெரிவித்ததுடன் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை விநியோகிப்பதில்லையென உறுதியளித்ததாகவும் வைகோ குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், வெளிவிவகார அமைச்சருடன் (பிரணாப் முகர்ஜி) இந்த விடயம் குறித்து தான் கலந்தாலோசித்து சிறப்பான முறையில் எதனை செய்ய முடியுமெனப் பார்ப்போம் என்று மன்மோகன் சிங் தெரிவித்ததாகவும் வைகோ கூறியுள்ளார்.
இதேசமயம் இந்த விடயம் குறித்து பிரணாப் முகர்ஜியை தான் சந்திக்க விருப்பதாக வைகோ தெரிவித்திருக்கிறார்.
வைகோ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வியாழக்கிழமை சமர்ப்பித்த மகஜரில் தெரிவித்திருப்பதாவது;
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் விபரிக்க முடியாத துன்பத்தையும் நெருக்கடிகளையும் மனித உரிமைமீறல்களுக்கு இலக்காகி இருப்பதையும் உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கண்மூடித்தனமான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், தமிழ் மக்கள் காணாமற் போதல் என்பன அங்கு (இலங்கையில்) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் இளைஞர்களும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். ஆயுதப்படையினரால் கடத்திச் செல்லப்படும் அந்த இளைஞர்கள் குறித்து மேலதிகமான எந்தத் தகவல்களும் கிடைப்பதில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டு விடுவதாக அஞ்சப்படுகிறது என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.