கடந்தகாலங்களில் அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலிகளின் முக்கிய நிலையங்கள் மீதான விமானத்தாக்குதல்களின் போது புலிகள் இயக்கத்தினரின் உயர்தொழில் நுட்பம் கொண்ட தொலைத்தொடர்பு நிலையங்கள் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் முல்லைத் தீவுப் பிரதேசத்திலுள்ள மற்றுமொரு உயர்தொழில்நுட்பத் தொலைத்தொடர்பு மத்திய நிலையம் விமானப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த தொலைத்தொடர்பு நிலையம் புலிகளின் ஏனைய தொலைத்தொடர்பு நிலையங்களைக் காட்டிலும் பெரியதும் அதி நவீன தொழில்நுட்பம் கொண்டதெனவும், தற்போது வன்னித் தாக்குதல்களை அரச படையினர் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் புலிகளுக்கும் இந்த தொலைத்தொடர் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாகவும் விமானப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதுபற்றி விமானப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப 15 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணிக்கு விமானப்படையின் தாக்குதல் ஜெற் விமானங்கள் குறித்த மாங்குளம் தெற்கு தொலைத்தொடர்பு நிலையத்தின் மீது குறிதவறாத தீவிர குண்டு வீச்சுக்களை மேற்கொண்டதாகவும், இந்த நிலையம் பற்றிய தகவல்கள் தரையிலிருந்தும் விமானப்படை நிலையத்திலிருந்தும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் இதற்கேற்பவே விமானக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டு புலிகளின் அதி முக்கியத்துவம் வாய்ந்த தொலைத்தொடர்பு மத்திய நிலையம் முற்றாகத் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் விமானப்படைத் தரப்பின் ஊடக அறிவிப்பாளர் விங் கொமாண்டர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெற் விமானிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக் கண்காணிப்பிலிருந்து புலிகளின் மேற்படி மாங்குளம் தெற்கு அதிநவீன தொலைத் தொடர்பு நிலையம் குண்டு வீச்சுகளில் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தத் தொலைத்தொடர்பு நிலையும் அழிக்கப்பட்ட பின்னர் புலிகளின் தொலைத்தொடர்பு செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டதாக மேலும் தெரியவந்துள்ளது. லங்காதீப :16/4/2008