ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
சச்சின் கப்டனாயிருக்கும் மும்பை அணி, 20 ஆம் திகதி பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியுடன் மும்பையில் விளையாடவுள்ளது.
மும்பை அணிக்கு, தாயகத்தில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் உள்ளூர் ரசிகர்கள் அப்போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அவுஸ்திரேலியத் தொடரின்போது சச்சினுக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் குணமடையவில்லை எனத் தெரிகிறது.
காயம் காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது மற்றும் 3 ஆவது டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி களத்தில் குதிப்பதற்கு இன்னும் இரு நாட்களே உள்ளன. இந்நிலையில், சச்சினின் கருத்து முதல் போட்டியில் அவர் ஆடமாட்டாரென்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
"காயத்திலிருந்து குணமடைய பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால், இன்னும் 100 சதவீதம் குணமாகவில்லை. தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 முக்கியமான போட்டிகளில் பங்கேற்க முடியாதபோது சிறிது ஏமாற்றமடைந்தேன். டாக்டர் மற்றும் உடலியக்க வல்லுநரின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து மும்பை அணி விளையாடும் ஐ.பி.எல். முதல் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமெனத் தெரிகிறது.
சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்ரேடியத்தில் முதல் போட்டி 23 ஆம் திகதி நடைபெறுகிறது. மும்பை அணியுடன் சென்னை சுப்ப கிங்ஸ் அணி விளையாடுகிறது. அதிலாவது சச்சின் விளையாடினால் ரசிகர்கள் ஆறுதல் அடைவர்.