இந்தியாவில் நேற்று முன் தினம் ஒலிம்பிக் தீப ஓட்டம் நடைபெற்றபோது அதற்குப் போட்டியாக திபெத்தியர்களும் ஊர்வலமொன்றை நடத்தியுள்ளனர்.
சீனாவிடம் சுயாட்சி கேட்டுப் போராடி வரும் திபெத்தியர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் காரணமாக பாரிஸில் ஒலிம்பிக் ஜோதி 4 முறை அணைக்கப்பட்டது.
இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் வசிப்பதால், டெல்லி ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திற்கு அவர்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குடியரசு தின விழாவுக்கு செய்யப்படுவது போன்று பன்மடங்கு செய்யப்பட்டிருந்தன. ஒலிம்பிக் சுடர் இந்தியா வந்திறங்கியது முதலே திபெத்தியர்களின் போராட்டம் தொடங்கியது. விமான நிலையம், தீபம் வைக்கப்பட்டிருந்த லீ மெரிடியன் ஹோட்டல் என அனைத்து இடங்களிலும் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஹோட்டல் முன் போராட்டம் நடத்திய 32 பேர் கைது செய்யப்பட்டனர். கடுமையான பாதுகாப்பை மீறி அவர்களால் ஒலிம்பிக் ஜோதி ஓட்டப் பாதையை நெருங்க முடியவில்லை.
இந்தச் சூழலில், அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி மாற்றுத் தீபத்தை ஏந்திச் சென்றனர். ஒலிம்பிக் ஜோதி வழிப்பாதைக்கு சில நூறு அடி தூரத்தில் இருந்து இந்த மாற்று ஊர்வலம் காலை 11 மணிக்குத் தொடங்கியது. இதில் 2 ஆயிரம் திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் ஊர் வலத்தைத் தொடக்கி வைத்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, சமூக சேவகி நபீசா அலி, பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்து, முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். ராஜ்காட்டில் தொடங்கிய இந்த ஓட்டம் ஜன்பத் வழியாக ஜந்தர் மந்தரை அடைந்தது.
இதேபோல், டெல்லி நாரிமண் பொயிண்ரில் உள்ள சீனத் தூதரக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த திபெத் இளைஞர்களில், 50 பேர் சட்ட விரோதமாகக் கூடியதாக கைது செய்யப்பட்டனர்.