கான்பூர் ஆடுகள சர்ச்சை தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபை ஐ.சி.சி.க்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ளது.
கான்பூரில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியிலிருந்தது. அதற்கேற்ப ஆடுகளம் தயாரிக்கப்பட்டிருந்ததாக தென்னாபிரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டி முடிந்ததும் ஆடுகள பராமரிப்பாளருக்கு கப்டன் தோனி பரிசளித்தது இந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது.
இந்த டெஸ்டில் இந்திய அணி 3 ஆவது நாளிலேயே வெற்றி பெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து போட்டி நடுவர் ரொஷான் மகாநாமா சர்வதேச கிரிக்கெட் சபைக்கு (ஐ.சி.சி) அளித்த அறிக்கையில் ஆடுகளம் மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் ஆடுகளத்தின் தன்மை குறித்து விளக்கமளிக்கும்படி ஐ.சி.சி. இந்திய கிரிக்கெட் சபைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்தநிலையில் , ஆடுகளச் சர்ச்சைக்கு விளக்கமளித்து இந்திய கிரிக்கெட் சபை ஐ.சி.சி.க்கு கடிதம் அனுப்பியுள்ளது. `ஆடுகளம் சரியில்லை என்ற மகாநாமாவின் கூற்றுக்கு பதில் அனுப்பியிருக்கிறோம். அது எந்த மாதிரியான விளக்கமென்ற விபரத்தை தெரிவிக்க இயலாது. அதனை ஐ.சி.சி. உங்களுக்கு (நிருபர்கள்) சொல்லட்டும்' என்று இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் நிரஞ்சன்ஷா தெரிவித்தார். நாங்கள் எங்கள் நிலையைத் தெளிவாக விளக்கிவிட்டோம். முடிவெடுப்பது ஐ.சி.சி. யின் கையில் தான் உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கான்பூர் ஆடுகளம் இந்தியாவுக்கு கைகொடுக்கும் வகையில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு விட்டது என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால், இந்த டெஸ்டில் விழுந்த 32 விக்கெட்டுகளில் 14 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களும் 18 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளரும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அதாவது எல்லாப் பந்து வீச்சுக்கும் சரியான அளவில் தான் ஆடுகளம் ஒத்துழைப்புக் கொடுத்துள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் சபை வலுவான காரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.