பெங்களூர் சின்னசாமி அரங்கில் நேற்று மாலை 6.30 மணி அளவில் ஐ.பி.எல். தொடக்க விழா வண்ணமயமாக நடந்தது. சுமார் 45 நிமிடங்கள் நடந்த கலை நிகழ்ச்சியில் ஜிம்னாஸ்டிக் வீரர்களின் சாகசம் முக்கிய அம்சமாக இடம்பெற்றது. பொலிவூட் இசை கலைஞர்கள் `ஷங்கர் - எஹ் சான் - லாய்' பாடல்களை பாடி அசத்தினர். பொலிவூட் நடிகைகளின் ஆட்டம் பாட்டமும், கண்ணைக் கவரும் வாணவேடிக்கைகளும் இடம்பெற்றன.
விழாவின்போது ஐ.பி.எல். அணிகளின் கப்டன்கள் அணிவகுத்து வந்தனர். பின்னர் போட்டிக்கான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. கிரிக்கெட் சபைத் தலைவர் சரத் பவார், அணிகளின் உரிமையாளர்களான நடிகர் ஷாருக்கான், நடிகை பிரித்தி ஜிந்தா உட்படப் பலரும் விழாவில் பங்கேற்றனர்.
உலகின் அதிக பரிசுத் தொகை கொண்ட `ருவென்ரி - 20' தொடராக ஐ.பி.எல். தொடர் அமைந்துள்ளது. சம்பியன் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 4.8 கோடி ரூபா பரிசாகக் கிடைக்கும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 2.4 கோடி ரூபாவும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 1.2 கோடி ரூபாவும் கிடைக்கும். 5 ஆவது இடத்துக்கு 80 இலட்சம் ரூபாவும் 6 ஆவது இடத்துக்கு 70 இலட்சம் ரூபாவும் 7 ஆவது இடத்துக்கு 50 இலட்சம் ரூபாவும் கடைசி இடம்பிடிக்கும் அணிக்கு 40 இலட்சம் ரூபாவுமென 12 கோடி ரூபா பரிசு வழங்கப்படும்.
*ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 59 போட்டிகள் 44 நாட்களில் நடக்கின்றன. உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தில் என ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு தலா இருமுறை மோதும். லீக் சுற்றில் ஒரு அணி மொத்தம் 14 போட்டியில் விளையாட வேண்டும். இதில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இவை மே 30 மற்றும் 31 ஆம் திகதி இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் பலப்பரீட்சை மேற்கொள்ளும். இதில் வெல்லும் இரு அணிகள் இறுதியாட்டத்திற்கு தகுதி பெறும். இறுதியாட்டம் ஜூன் 1 ஆம் திகதி நடக்கிறது.
*சினிமா நட்சத்திரங்கள்: ஐ.பி.எல். தொடருக்கு சினிமா நட்சத்திரங்கள் `கிளாமர்' சேர்க்கின்றனர். கொல்கத்தா நைற்ரைடர்ஸ் அணியை ஷாருக்கானும், பஞ்சாப் கிங்ஸ் அணியை பிரித்தி ஜிந்தாவும் வாங்க மற்ற அணியினர் தங்களுக்கும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு தேவை என எண்ணத் தொடங்கின.
இதையடுத்து டில்லி டேர் டெவில்ஸ் அணி, அக்ஷய் குமாரை தங்களது அணியின் விளம்பரத் தூதராக நியமித்தது. இதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹிருத்திக் ரோஷனும், சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோரும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர் அணியின் விளம்பரப் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் மற்றும் கத்ரினா கைவ் நடிக்கின்றனர். மேலும், ராணி முகர்ஜி, பிபாஷா பாசு மற்றும் ஜூகி சாவ்லா ஆகியோரும் கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணிக்காகத் தயாரிக்கப்படும் அல்பம் ஒன்றில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.
*ஐ.பி.எல். தொடரில் சென்னை `சுப்ப கிங்ஸ்' அணியின் கப்டன் தோனி துடுப்பாட்டக்காரராக மட்டும் களமிறங்குகிறார். இவருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பராக இருப்பார்.
*நாணயச் சுழற்சியில் வெற்றியாளரை நிர்ணயிக்க கப்டன்கள் வரும்போது மைதானத்தின் விளக்குகள் அணைக்கப்படும். இருவர் மட்டும் தெரியும்படி `ஸ்பொட்லைற்' அமைத்து புதுமை செய்யவுள்ளனர். இது குறித்து `பெங்களூர் ரோயர் சாலஞ்சர்ஸ்' அணியின் தலைமை நிர்வாகி சாரு சர்மா கூறுகையில்; "மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் இருப்பார்கள். எனவே, விளக்குகளை அணைப்பது பற்றி உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நாணயச் சுழற்சியின் போது கப்டன்கள் மட்டும் தெரியும்படி `ஸ்பொட் லைற்' அமைத்துக் காண்பிக்கவுள்ளோம்", என்றார்.
*ஐ.பி.எல். போட்டிகளின் செய்திகளை சேகரிக்க ஊடகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. `இன்ரநெற்'றில் படங்களை வெளியிடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் `ரி.வி' நிறுவனங்களுக்கும் கடுமையான கட்டணமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஊடகங்கள் புறக்கணிப்பு செய்யும் அபாயமிருந்தது. பின்னர் சுமுகத் தீர்வு காணப்பட்டது. ஆனாலும், சர்வதேச புகைப்பட நிறுவனங்களான ராய்டர்ஸ், ஏ.பி. போன்றவற்றிற்கு `இணையத்தளங்களுக்கு' படங்களை கொடுக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை நீக்கப்படாவிட்டால், இவை தொடரைப் புறக்கணிக்கும் வாய்ப்புள்ளது.