பாகிஸ்தானில் நேற்று முன்தினம் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் முன்னிலையில் 24 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமானம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் யூசுப் ரஸா கிலானியும் கலந்துகொண்டார்.
பெனாசிர் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் 11 அமைச்சர்களும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி சார்பில் 9 பேரும். அவாமி தேசியக் கட்சி சார்பில் 2 பேரும் பதவியேற்றனர். இதுதவிர ஜமியாத் உலேமா இஸ்லாம் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியும் பழங்குடி இனத்தவருக்கு ஒரு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி முஷாரப் பதவியில் நீடிப்பது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி பிரதமர் கிலானியின் பதவியேற்பு விழாவை ஷெரீப் கட்சியினர் புறக்கணித்தனர். ஆனால், தற்போது வேறு வழியில்லாமல் முஷாரப்பிடம் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஆனால், முஷாரப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் அடையாளமாக ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அமைச்சர்கள் தங்கள் கைகளில் கறுப்பு பட்டியை அணிந்திருந்தனர்.
முஷாரப்பிடம் எமது கட்சியினர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது விருப்பத்தகாததுதான். ஆனால், நாட்டின் நலன் கருதி அந்த கசப்பை விழுங்க வேண்டியதாயிற்று என்று கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷா முகமத் குரேஷி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் சௌத்ரி அகமது முக்தார் இராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் பிரதமர் பதவிக்கான போட்டிக் களத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய ஆதரவாளர் இஷாக் தர்க்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று கருதப்படும் ஷெரி ரஹ்மானுக்கு செய்தி ஒளிப்பரப்பு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் காஷ்மீர் விவகாரத்துறையும் மக்கள் கட்சியே எடுத்துக் கொண்டுள்ளது.
அமைச்சரவை மேலும் விரிவுபடுத்தப்படும் என்று மக்கள் கட்சி இணைத் தலைவரும் பொலிஸாரின் கணவருமான ஆஸிப் அலி சர்தாரி கூறினார். மக்கள் கட்சி மற்றும் ஷெரீப் கட்சி சார்பில் தலா பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.